Ad Banner
Ad Banner
Ad Banner
Ad Banner
 உலகம்

அகமதாபாத் விமான விபத்து; மற்றோர் உயர்மட்ட செயற்குழு நிறுவப்படும்

15/06/2025 01:58 PM

புது டெல்லி, 15 ஜூன் (பெர்னாமா) -- இந்தியா, குஜராத் மாநிலனத்தின் அகமதாபாத்தில் நிகழ்ந்த விமான விபத்து தொடர்பான விசாரனையை மேற்கொள்ள மற்றோர் உயர்மட்ட செயற்குழு நிறுவப்படும் என்று அந்நாட்டின் பொது விமானப் போக்குவரத்து அமைச்சர் ராம் மோகன் நாயுடு தெரிவித்திருக்கிறார்.

இந்தச் செயற்குழுவுக்கு உள்துறை அமைச்சின் செயலாளர் தலைமை தாங்குவார் என்று கூறிய அவர், மூன்று மாதங்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று குறிப்பிட்டார்.

இச்சம்பவம் தொடர்பாக பகிரப்படும் அனைத்து கோட்பாடுகள் மற்றும் தகவல்களை ஆராய்வதற்கும், விபத்துக்கான காரணங்களையும் பாதுகாப்பு அம்சங்களையும் கண்டறிவதற்கும் இக்குழு அமைக்கப்பட்டிருப்பதாக ராம் மோகன் கூறினார்.

''இந்தச் சம்பவம் தொடர்பாக அனைத்து கோட்பாடுகள் அல்லது பிற தகவல்களையும் ஆராய, இவ்விபத்து மற்றும் பாதுகாப்பு குறித்தும் மற்றொரு குழுவை அமைப்பது மிகவும் நல்லது என்று நாங்கள் உணர்ந்தோம். எனவே நேற்று மற்றொரு உயர்மட்டக் குழுவை அமைக்கப் போவதாக அறிவித்திருந்தேன். உடனடியாக நேற்று அக்குழுவை அமைத்துள்ளோம்,'' என்றார் அவர்.

இக்குழுவில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த நிபுணர்கள் இடம் பெறவுள்ளனர்.

கடந்த வெள்ளிக்கிழமை மாலை மணி 5 அளவில் விமானத்தின் கருப்புப் பெட்டி கண்டெடுக்கப்பட்டதை தொடர்ந்து இந்திய அரசாங்கத்தின் விமான விபத்து புலனாய்வுப் பணியகம், தொழில்நுட்ப விசாரணையைத் தொடங்கியுள்ளது.

அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம், வானில் பறக்க துவங்கிய 60 வினாடிகளில் விழுந்து வெடித்து சிதறியது.

இந்த விபத்தில் குஜராத்தின் முன்னாள் முதலமைச்சர் விஜய் ருபானி உட்பட 241 பேர் பலியாகினர்.

இதில் ஒரே பயணி மட்டும் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்.

தரையில் விழுந்த விமானம், மருத்துவ கல்லூரி விடுதியில் மோதியதில், மருத்துவ மாணவர்கள் 10 பேரும் இந்த விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர்.

44 பேர் படுகாயமடைந்தனர்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)