புத்ராஜெயா, 02 ஏப்ரல் (பெர்னாமா) -- மின்னணுக் கழிவு நிர்வகிப்பு தொடர்பான வழக்கில், சுற்றுச்சூழல் துறை தலைமை இயக்குநர் மற்றும் துணைத் தலைமை இயக்குநர் மீது நாளை கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படும்.
அந்நடவடிக்கை மேற்கொள்ள, அரசுத் தரப்பிடமிருந்து குற்றச்சாட்டைப் பதிவு செய்யும் உத்தரவை தமது தரப்பு பெற்றுள்ளதாக மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமை ஆணையர் டான் ஶ்ரீ அசாம் பாக்கி தெரிவித்தார்.
''நாங்கள் சட்டத்துறைத் தலைவரின் ஒப்புதலைப் பெற்றுள்ளோம். மேலும், முன்னாள் தலைமை இயக்குநர் மற்றும் துணைத் தலைமை இயக்குநர் ஆகிய இருவர் மீதும் நாளை குற்றச்சாட்டுகள் சுமத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சட்டரீதியான நடவடிக்கைகள் சுமுகமாக நடைபெறும் என்றும், எவ்வித சிக்கல்களும் இன்றி அவர்கள் நாளை நீதிமன்றத்தில் நிறுத்தப்படுவார்கள் என்றும் நான் நம்புகிறேன்,'' என்று அவர் கூறினார்.
மின்னணுக் கழிவு நிர்வகிப்பு தொடர்பான ஊழலில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்பட்டதைத் தொடர்ந்து, சுற்றுச்சூழல் துறை தலைமை இயக்குநர் மற்றும் அவரது துணை இயக்குநர் ஆகியோர் முன்னதாக 2009-ஆம் ஆண்டு ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.
இவ்விவகாரம் தொடர்பில், SPRM இவ்வாண்டின் தொடக்கத்தில் இருந்து விசாரணை மேற்கொண்டு வருகிறது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)