கோலாலம்பூர், 23 பிப்ரவரி (பெர்னாமா) -- பிரதமர் பதவிக் காலத்தை 10 ஆண்டுகளாகக் கட்டுப்படுத்தும், 2026-ஆம் ஆண்டு திருத்தம் செய்யப்பட்ட அரசியலமைப்புச் சட்ட மசோதா முதல் வாசிப்பிற்காக இன்று மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது.
அதன் இரண்டாம் வாசிப்பு அடுத்த வாரம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுவதாக இன்று அதனைத் தாக்கல் செய்த சட்டம் மற்றும் கழகச் சீர்திருத்தத்திற்கான பிரதமர் துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ அசாலினா ஒத்மான் சாயிட் தெரிவித்தார்.
இச்சட்ட மசோதாவில், கூட்டரசு அரசியலமைப்பின் பிரிவு 43-ஐ திருத்தும் புதிய பிரிவான 2ஏ-வை இணைக்கும் முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.
அதாவது, பிரிவு 43-இன் (2)(ஏ) உட்பிரிவின் கீழ் நியமிக்கப்பட்ட ஒரு பிரதமர், தொடர்ச்சியாகவோ அல்லது வேறுவிதமாகவோ எந்தக் காலகட்டத்திலும் 10 ஆண்டுகளுக்கு மேல் பதவியில் இருக்கக்கூடாது என்பதை விவரிக்கின்றது.
இச்சட்ட மசோதாவில் பிரிவு 43-இன் கீழ் 4ஏ முதல் 4டி வரையிலான புதிய பிரிவுகளும் இணைக்கப்பட்டுள்ளன.
இதில், 4ஏ படி பிரதமர் ஒருவர் தமது பதவிக்காலம் முடிவடைந்தவுடன், அதாவது பதவி வகித்த பத்தாண்டுகளுக்குப் பின்னர் அப்பதவியில் இருந்து விலக வேண்டும்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)