பெட்டாலிங் ஜெயா, 26 ஜூன் (பெர்னாமா) -- அம்னோவின் முன்னாள் உதவித் தலைவர் டத்தோ ஶ்ரீ ஹிசாமுடின் துன் உசேன் உறுப்பினர் இடைநீக்கத்தை ரத்து செய்வதற்கான தீர்மானம் குறித்து முடிவெடுக்கும் பொறுப்பை, அக்கட்சியின் அரசியல் பிரிவு மற்றும் உச்ச மன்றத்திடமே விட்டுவிடுவதாக அக்கட்சியின் தலைவர் டத்தோ ஶ்ரீ டாக்டர் அஹ்மாட் சாஹிட் ஹமிடி தெரிவித்தார்.
சம்பந்தப்பட்ட அந்நபர் எந்தவொரு மேல்முறையீட்டு கடிதத்தையோ அல்லது மன்னிப்பு கடிதத்தையோ சமர்ப்பிக்கவில்லை என்றாலும், இந்த தீர்மானம் குறித்து அம்னோ உச்சமன்றம் விவாதிக்க முடியும் என்று சாஹிட் கூறினார்.
ஹிசாமுடினின் உறுப்பினர் பதவி, இடைநீக்கத்தை எந்தவொரு நிபந்தனையுமின்றி உடனடியாக நீக்கக் கோரி அம்னோவின் செம்பொரோங் பிரிவு கொண்டு வந்த தீர்மானம் குறித்து கருத்து கேட்கப்பட்டபோது அவர் அவ்வாறு கூறினார்.
உறுப்பினர் பதவியை இடைநிறுத்துவதற்கான எந்தவொரு நடவடிக்கையும் நியாயமான முறையில் மேற்கொள்ளப்படும் என்றும், உறுதியான காரணமில்லாமல் அம்னோ நிர்வாகக் குழு அத்தகைய நடவடிக்கையை மேற்கொள்ளாது என்றும் சாஹிட் வலியுறுத்தினார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)