Ad Banner
Ad Banner
Ad Banner
Ad Banner
Ad Banner
 பொது

2025 ஆசியான் இளைஞர் மனநலம் குறித்த கலந்துரையாடல்; 135 பேர் பங்கேற்றனர் 

29/06/2025 06:34 PM

கோத்தா கினபாலு, 29 ஜூன் (பெர்னாமா) -  சபா, கோத்தா கினபாலுவில் நேற்று தொடங்கி இரண்டு நாள்களுக்கு நடைபெறும் 2025-ஆம் ஆண்டு ஆசியான் இளைஞர் மனநலம் குறித்த வட்டமேசை கலந்துரையாடலில் ஆசியான் உறுப்பு நாடுகள் மற்றும் Timor Leste-வைச் சேர்ந்த 135 பங்கேற்பாளர்கள் கலந்துக் கொண்டுள்ளனர்.
   
மனநல நிபுணர்கள், மத அறிஞர்கள், அரசாங்க அதிகாரிகள், பொதுமக்களுக்கான பிரதிநிதிகள் மற்றும் இளைஞர்கள் என பல்வேறு பின்னனிகளைச் சேர்ந்தவர்கள் அந்த கலந்துரையாடலில் பங்கேற்றதாக, இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சர் ஹன்னா யோ கூறினார்.

மலேசியாவைப் பொருத்தவரை, 15 முதல் 30 வயதுக்குட்பட்ட இளைஞர்களின் மனநலம், மிதமான மட்டத்தில் இருப்பதாக, 2023-ஆம் ஆண்டு மலேசிய இளைஞர் மனநல குறியீட்டு ஆய்வு, MyMHI'23-இன் முடிவுகள் காட்டுவதால், இக்கலந்துரையாடல் மிகவும் அவசியம் என்று ஹன்னா யோ தெரிவித்தார்.  

"இது போன்ற ஒரு முதன்மையான விவகாரத்தில், இப்பிரச்சனையைக் களைய அரசாங்கத்தால் மட்டும் தீர்வு காண முடியாது. இவ்விவகாரத்தில், அனைத்து தரப்பினரும் ஒன்று கூடி விவாதிக்க வேண்டும். எங்களுக்கு மருத்துவ நிபுணர்கள் வேண்டும், இளைஞர்கள் கூட்டம் வேண்டும் மற்றும் எங்களுக்கு உதவ மத சார்ந்த அமைப்புகள் வேண்டும்," என்றார் அவர்.

இன்று கோத்தா கினபாலுவில் 2025-ஆம் ஆண்டு ஆசியான் இளைஞர் மனநலம் குறித்த வட்டமேசை கலந்துரையாடலை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்த பின்னர், அவர் செய்தியாளர்களிடம் அதனை கூறினார்.

இதனிடையே, இன்றைய இளைஞர்கள் தங்களின் உணர்வுகளையும் மன அழுத்தங்களையும், சமூக ஊடகங்களில் வெளிப்படுத்துவதற்கு ஆர்வம் காட்டுவதால், அவர்களின் சொந்த அடையாளத்தைக் கண்டறிவதில் சிக்கலை எதிர்நோக்குவதாக, IYRES எனப்படும், மலேசிய இளைஞர் மேம்பாட்டு ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஷஹானிம் யஹ்யா விவரித்தார்.

"எனவே, மன அழுத்தம் குறித்த எண்ணிக்கை உண்மையில் மிகவும் அதிகம். மன அழுத்தம் என்றால் என்ன. மன அழுத்தம் சுயமாக ஏற்படுகின்றதா அல்லது இளைஞர்களின் சுற்றுச்சூழல் அமைப்பு காரணமா," என்று ஷஹானிம் யஹ்யா கூறினார்.

"ஆசியான் இளைஞர்கள் குரல்; மனதை மேம்படுத்துதல், நல்வாழ்வை உறுதி செய்தல்" என்ற கருப்பொருளில் நடத்தப்படும் இந்நிகழ்ச்சி, வட்டார ஒத்துழைப்பின் மூலம் ஆசியான் இளைஞர்களின் மனநல பிரச்சனைகளை நிவர்த்திச் செய்வதை நோக்கமாக கொண்டிருப்பதாக, அவர் கூறினார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)