இஸ்கண்டார் புத்ரி, 19 ஜூன் (பெர்னாமா) -- வரும் ஜூன் 22-ஆம் தேதி ஒப்பந்தம் நிறைவடையவிருக்கும் தேசிய போலீஸ் படைத் தலைவர் டான் ஶ்ரீ ரசாருடின் ஹுசேனுக்கு பதிலாக புதிதாக நியமிக்கப்படவிருக்கும் தேசிய போலீஸ் படைத் தலைவரின் பெயர் குறித்து தாம் இன்னும் முடிவு செய்யவில்லை என்று பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
அப்பதவிக்கான வேட்பாளர் பட்டியல் இஸ்தானா நெகாராவிடம் சமர்ப்பிக்கப்பட்டுவிட்டதா இல்லையா என்பது குறித்தும் அவர் தெரிவிக்க மறுத்துவிட்டார்.
''யார் சொன்னது? உண்மையா? நான் பிறகு மாமன்னரை கேட்கிறேன்,'' என்றார் அவர்.
இன்று, ஜோகூர் கெஅடிலான் கட்சி தலைமைத்துவத்துடனான சந்திப்பிற்கு பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.
தேசிய போலீஸ் தலைவருக்கான வேட்பாளர் பட்டியல் அரசாங்கத்தால் இறுதி செய்யப்பட்டு மாட்சிமை தங்கிய மாமன்னரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக ஊடகங்கள் வெளியிட்ட செய்தியைத் தொடர்ந்து அன்வார் அவ்வாறு கூறியுள்ளார்.
--பெர்னாமா
[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]