Ad Banner
Ad Banner
Ad Banner
Ad Banner
 பொது

விடைபெற்றார் பழனிவேல்...

19/06/2025 06:53 PM

செந்தூல், 19 ஜூன் (பெர்னாமா) -- கடந்த செவ்வாய்க்கிழமை காலமான ம.இ.கா முன்னாள் தலைவர் டத்தோ ஶ்ரீ ஜி. பழனிவேலின் நல்லுடல் அரசியல் தலைவர்கள் மற்றும் பொதுமக்களின் இறுதி அஞ்சலிக்கு பின்னர் இன்று மாலை மணி 4.30 அளவில் செந்தூல் இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

சாந்தமான குணத்தோடும் ஆன்மிக பற்றுதலோடும் அரசியல் வட்டாரத்தில் நிலைத்திருந்த ம.இ.கா-வின் 8-வது தலைவரான பழனிவேல் கட்சிக் கொடி போர்த்தப்பட்டு இறுதி மரியாதையுடன் இன்று விடைபெற்றார்.

மாலை மணி மூன்று அளவில், அன்னாரின் நல்லுடல் பங்சார், ஜாலான் பங்குங், தாமான் பண்டாராயாவில் உள்ள அவரின் இல்லத்திலிருந்து எடுத்துச் செல்லப்பட்டு மாலை மணி 3.45-க்கு செந்தூல் இந்து மயானம் வந்தடைந்தது.

45 நிமிடங்கள் நடைபெற்ற டத்தோ ஶ்ரீ ஜி. பழனிவேலின் இறுதிச் சடங்கில் அவரின் குடும்ப உறுப்பினர்கள் உட்பட பொதுமக்கள் சுமார் 200 பேர் கலந்து கொண்டனர்.

இதனிடையே, கட்சிக்கும் மக்களுக்கும் தன்னலம் கருதாது சேவையாற்றிய ஓர் உன்னத தலைவர் பழனிவேல் என்று அவரின் இறுதிச் சடங்கில் கலந்தகொண்ட ம.இ.கா உதவித் தலைவர் டத்தோ டி. முருகையா தெரிவித்தார்.

ஒரு வாரத்திற்கு முன்னர், கிருமித் தொற்று காரணமாக கோலாலம்பூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த பழனிவேல் கடந்த செவ்வாய்க்கிழமை காலை மணி 8.40 அளவில் தமது 76 வயதில் இயற்கை எய்தினார்.

--பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]