கோலாலம்பூர், 19 ஜூன் (பெர்னாமா) -- உலகளாவிய மின்னணு மற்றும் மின்னியல் உபரிப்பாக தொழில்துறையின் முன்னணி தளமான 2025 தென்கிழக்கு ஆசியா செமிகோனில் பங்கேற்பதன் மூலம் மலேசியா மொத்தம் 460 கோடி ரிங்கிட் சாத்தியமுள்ள முதலீடுகளை வெற்றிகரமாக ஈர்த்துள்ளது.
இதன்வழியாக, உலகளாவிய முதலீட்டாளர்களின் பார்வையில் மலேசியாவின் ஈர்ப்பு நிரூபிக்கப்பட்டுள்ளதாக முதலீடு, வாணிபம் மற்றும் தொழில்துறை அமைச்சர் தெங்கு டத்தோ ஶ்ரீ சஃப்ரூல் தெங்கு அப்துல் அசிஸ் தெரிவித்தார்.
முதலீட்டுத் திறனைத் தவிர்த்து ஒன்பது உள்ளூர் நிறுவனங்கள் சுற்றுச்சூழல், சமூக மற்றும் நிர்வாகக் கொள்கைகளைப் பின்பற்றும் சோதனை உபகரணங்கள், செயல்முறை தீர்வுகள் மற்றும் மின்னணு கழிவு நிர்வகிப்பு புத்தாக்கம் உள்ளிட்ட பல்வேறு உயர் தொழில்நுட்ப தயாரிப்புகளை காட்சிப்படுத்த பெவிலியன் மலேசியா அனைத்துலக கவனத்தையும் ஈர்த்துள்ளதாக தெங்கு டத்தோ ஶ்ரீ சஃப்ரூல் குறிப்பிட்டார்.
''இந்த நிறுவனங்கள் ஆண்டுக்கு 84 கோடியே 30 லட்சம் ரிங்கிட்டுக்கும் அதிகமான வருவாயைப் பதிவு செய்ய முடிந்தது. இதில் பெரும்பகுதி அனைத்துலக சந்தைகளுக்கான ஏற்றுமதிகளிலிருந்து வந்தது. இந்த நிகழ்வின் போது, சிங்கப்பூர், ஜப்பான், சீனா மற்றும் அமெரிக்காவிலிருந்து வாடிக்கையாளர்களையும் ஈர்க்க முடிந்தது. இதன் விளைவாக கிட்டத்தட்ட 23 கோடியே 70 லட்சம் ரிங்கிட் ஏற்றுமதி சாத்தியமானது,'' என்றார் அவர்.
நுண்மின்னணுவியல் மற்றும் மின்னியல் உபரிப்பாக தொழில்துறைகளின் 'உலகக் கோப்பை' என்று விவரிக்கப்படும் இந்நிகழ்வில் நாட்டின் பேராளர்கள், முக்கிய தரவு மைய நிறுவனங்கள் உட்பட மின்சாரம் மற்றும் மின்னணு பொறியியல் துறையில் முதலீட்டாளர்களுடன் வியூக சந்திப்புகளை நடத்தியதாகவும் தெங்கு சஃப்ரூல் கூறினார்.
--பெர்னாமா
[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]