கோலாலம்பூர், மே 21 (பெர்னாமா) -- தொடர்பு அமைச்சு மற்றும் அது தொடர்புடைய நிறுவன ஊழியர்களின் சேவையை அங்கீகரிக்கும் விதமாக ஆண்டுதோறும் ஏபிசிஎனப்படும் சிறந்த சேவைக்கான விருது வழங்கி அங்கீகரிக்கப்படுகிறது.
அதில் இம்முறை தேசிய செய்தி நிறுவனமான பெர்னாமாவைச் சேர்ந்த இந்திய பணியாளர்கள் உட்பட மொத்தம் 63 பேருக்கு இவ்விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டது.
இந்த விருது, இதர ஊழியர்களின் செயல்திறனைத் தொடர்ந்து மேம்படுத்தவும், நிறுவனத்தின் சிறப்பை முன்னெடுக்கவும் ஊக்குவிக்கும் என்று தாம் நம்புவதாக பெர்னாமா தலைமை செயல்முறை அதிகாரி டத்தின் படுக்கா, நூருல் அஃபிடா கமாலுடின் தெரிவித்தார்.
தகவல் தொடர்பு அமைச்சின் கீழ் இயங்கும் ஒரு நிறுவனம் என்ற அடிப்படையில், தற்போதைய தேவைகளுக்கு ஏற்ப தொடர்ந்து செயல்பட்டு, நாட்டின் ஊடகத் துறையில் தமது பங்கை பெர்னாமா வலுப்படுத்த வேண்டும் என்று நூருல் அஃபிடா கமாலுடின் கூறினார்.
மேலும், நிர்வாகத்திற்குப் புதிய ஆலோசனைகளையும் கருத்துகளையும் கொண்டு வரக்கூடிய இளைஞர்களே தற்போது பெர்னாமாவின் பணியாளர்களாக உள்ளனர் என்றும் அவர் கூறினார்.
இன்று வியாழக்கிழமை தொடர்பு அமைச்சின் 2025-ஆம் ஆண்டுக்கான APC விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்ட போது அவர் அதனைத் தெரிவித்தார்.
இதனிடையே, இன்று விருது பெற்ற பெர்னாமா உட்பட தொடர்பு அமைச்சின் கீழ் செயல்படும் நிறுவனங்களின் இந்திய பணியாளர்கள் சிலர் தங்களது மகிழ்ச்சியை பெர்னாமாவிடம் பகிர்ந்து கொண்டனர்.
"எங்களது சேவைக்கு கிடைத்த இந்த விருது எங்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது. எங்களது வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் நன்றிக் கூற கடமைப்பட்டுள்ளோம்," அவர்கள் கூறினர்.
தொடர்பு அமைச்சு மற்றும் அது தொடர்புடைய நிறுவனங்களில் பணியாற்றும் 687 ஊழியர்களுக்கு, தொடர்பு அமைச்சர் Datuk Fahmi Fadzil அவ்விருதை வழங்கினார்.
- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: மாலை 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)