புத்ராஜெயா, ஏப்ரல் 28 (பெர்னாமா) -- டத்தோ ஶ்ரீ ரஃபிசி ரம்லியின்முன்னாள் உதவியாளரான ஜேம்ஸ் சாய் என்றறியப்படும் சாய் ஜின் ஷெர்ன், மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் எஸ்.பி.ஆர்.எம் மேற்கொள்ளும் விசாரணையில் விளக்கமளிக்கும் பொருட்டு இன்று புத்ராஜெயாவில் உள்ள அதன் தலைமையகத்திற்கு வருகையளித்தார்.
இங்கிலாந்தில் உள்ள உலகின் முன்னணி மின்னியல் உபரிப்பாக நிறுவனமான Arm Holdings சம்பந்தப்பட்ட வழக்கின் விசாரணைக்கு உதவும் வகையில் ஜேம்ஸ் சாய் தமது வழக்கறிஞருடன் காலை மணி 10-க்கு அங்கு வந்தடைந்தார்.
இன்று காலைதான் அவர் இங்கிலாந்திலிருந்து வந்தடைந்ததாக தெரிய வந்துள்ளது.
அம்மின்னியல் உபரிப்பாக நிறுவனம் சம்பந்தப்பட்ட வழக்கு குறித்த விசாரணைக்கு உதவ முன்வருமாறு ஜேம்ஸ் சாய்க்கு எஸ்.பி.ஆர்.எம் இரு வார கால அவகாசம் வழங்கியதுடன், அவர் மலேசியா திரும்புவதற்கான விமானப் பயணச் செலவையும் ஏற்கத் தயார் என்று அவ்வாணையம் கடந்த ஏப்ரல் முதலாம் தேதி அறிவித்திருந்தது.
முன்னதாக, மலேசிய அரசாங்கத்திற்கும் வெளிநாட்டு நிறுவனம் ஒன்றிற்கும் இடையே 110 கோடி ரிங்கிட் மதிப்பிலான ஒப்பந்தம் தொடர்பாக கடந்த பிப்ரவரி 16-ஆம் தேதி விசாரணை அறிக்கை ஒன்றை எஸ்.பி.ஆர்.எம் திறந்தது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)