கோலாலம்பூர், 20 பிப்ரவரி (பெர்னாமா) --பகாங், குவாந்தான், பத்து 10-வில் உள்ள இராணுவ முகாமில் முதலாவது படைப்பிரிவில் பயிற்சி பெற்று வந்த இராணுவ வீரர் ஒருவர், தெங்கு அம்புவான் அஃப்சான் மருத்துவமனை எச்.டி.ஏ.ஏ-வில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.
பிப்ரவரி 18-ஆம் தேதி, பயிற்சி முகாமில் 22 வயதான கே. இந்திரன் மயங்கிய நிலையில் காணப்பட்டதாகவும், தொடர் சிகிச்சைக்காக அந்த மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாகவும், பகாங் மாநில போலீஸ் தலைவர் டத்தோ ஶ்ரீ யஹ்யா ஒத்மான் கூறினார்.
எனினும், சிகிச்சைப் பலனிறி நேற்று மாலை மணி 4 அளவில் அவர் உயிரிழந்ததாக அவர் கூறினார்.
இன்று காலையில் மருத்துவமனையின் தடயவியல் பிரிவில் இந்திரனுக்கு பிரேதப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில், பாதிக்கப்பட்டவருக்கு உடல் ரீதியாக அல்லது உள் காயங்கள் இருப்பதற்கான அடையாளங்கள் எதுவும் கண்டறியப்படவில்லை என்றும் அவர் கூறினார்.
இதனிடையே, மரணத்திற்கான காரணம் இன்னும் விசாரணையில் இருப்பதாகவும், இராசாயண அறிக்கைக்காக தங்கள் தரப்பு காத்திருப்பதாகவும், யஹ்யா தெரிவித்தார்.
பகடிவதைக்கு உட்படுத்தப்பட்டு இந்திரனுக்கு மரணம் விளைவித்ததாக, முன்னதாக சமூக ஊடகத்தில் பரவலாக பகிரப்பட்டு வந்தது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)