Ad Banner
Ad Banner
 பொது

தவறான தகவல் வழங்கப்பட்டதால் விபத்து நிகழ்ந்த இடத்திற்கு ஆம்புலன்ஸ் தாமதமாகச் சென்றது

16/02/2026 04:58 PM

பேராக், 16 பிப்ரவரி (பெர்னாமா) --  பேராக், ஜெலாபாங்கில் விபத்து ஏற்பட்ட இடம் குறித்து தவறான தகவல் வழங்கப்பட்டதே, சம்பவ இடத்திற்கு ஆம்புலன்ஸ் சென்று சேருவதில் தாமதம் ஏற்பட்டது.

ஈப்போவில் உள்ள ராஜா பெர்மைசூரி பைனுன் மருத்துவமனையில் இருந்து எட்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ள புன்சாக் ஜெலாபாங் குடியிருப்புப் பகுதியில் விபத்து நிகழ்ந்ததாக முதலில் தகவல் தெரிவிக்கப்பட்டதாக, பேராக் மாநில சுகாதார துறை விளக்கம் அளித்துள்ளது.

சம்பவம் நிகழ்ந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்ட குடியிருப்புப் பகுதிக்கு ஆம்புலன்ஸ் சென்று சேர்ந்தபோது, ​​அங்கே எந்த விபத்தும் நிகழவில்லை என்பது கண்டறியப்பட்டது.

இருப்பினும், பின்னர் அழைப்பாளரை அழைத்து விபத்து நிகழ்ந்த இடம் ஜெலாபாங்கை நோக்கிச் செல்லும், ஈப்போ-லுமுட் நெடுஞ்சாலை என்று மறு உறுதி செய்யப்பட்டதாக, திங்கட்கிழமை வெளியிடப்பட்ட ஓர் அறிக்கையின் வழி, பேராக் மாநில சுகாதார துறை குறிப்பிட்டுள்ளது.

சம்பவம் நிகழ்ந்த இடத்தை வந்தடைந்தவுடன், பாதிக்கப்பட்டவர்களுக்கு முதலுதவி வழங்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

கடந்த பிப்ரவரி 10-ஆம் தேதி நிகழ்ந்த இவ்விபத்தில் மூன்று வயது பெண் குழந்தை உயிரிழந்தது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)