கோலாலம்பூர், 3 டிசம்பர் (பெர்னாமா) -- ஒளி வடிவில் இறைவனை வணங்கும் பெருநாளே கார்த்திகை திருநாள்.
தமிழர்களின் தொன்மையான பண்டிகைகளில் ஒன்றான கார்த்திகையை, சங்க இலக்கியங்களான நற்றிணை, பரிபாடல், புறநானூறு ஆகியவையும் சிறப்பித்துக் கூறியுள்ளன.
காலங்கள் மாறினாலும், நமது பண்பாடு மாறாமல் கார்த்திகை திருநாள் பாரம்பரியமாக வீடுகளிலும் ஆலயங்களிலும் கொண்டாடப்படுகிறது.
கார்த்திகை மாத வளர்பிறை கிருத்திகை நட்சத்திரத்தில் இந்த கார்த்திகை தினம் கொண்டாடப்படுகிறது.
கார்த்திகை தீபத்தின் முதல் நாள் ஏற்றப்படும் பரணி தீபம், முருகனுக்கு வழிபாட்டு தினமாக கருதப்படுகிறது.
மறுநாள் திருகார்த்திகைத் தீபம், சிவனுக்காக ஏற்றப்படுவதை கோவில் கார்த்திகையாக கொண்டாடப்படுகிறது.
இந்நாளில் சிவபெருமான் அக்னி வடிவமாக தமிழ்நாட்டில், திருவண்ணாமலையில் உருவெடுத்தாக வரலாறுகளும் கூறுகின்றன.
இந்நாளில் சிவபெருமான் அக்னி லிங்கமாக தம் பக்தர்களுக்கு அருள் பாலிப்பார் என்பதால், திருவண்ணாமலையின் உச்சியில் அண்ணாமலையார் தீபம் ஏற்றப்படுவதே அங்கு விஷேசம்.
அண்ணாமலையார் தீபம் என்பது திருவிளக்கின் விஸ்வரூபம் ஆகும்.
வெளிச்சம் இல்லாவிட்டால், நம்மை சுற்றி இருக்கும் எதையும் நம்மால் உணர முடியாது.
இந்நாளில் விரதம் இருந்து, இறைவனைத் தொழுது பின்னர், வீட்டு வாசலில் அகல் விளக்குகளை ஏற்றும்போது, ஒளி கொடுக்கும் தீபச் சுடர்கள், எங்கும் பிரகாசித்து மகிழ்ச்சியையும் வீட்டிற்குக் கொண்டு வரும் என்பது ஐதீகமாக இருக்கிறது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)