கோலாலம்பூர், 29 ஜூன் (பெர்னாமா) -- முதுமையில் நடந்து வரும் ஒவ்வொரு இதயத்திற்கும் மறக்க முடியாத நினைவுகளைக் கொடுப்பது அவர்களின் பள்ளி மற்றும் பல்கலைக்கழக நாள்கள்தான்.
அன்று, நண்பர்களுடன் ஆடிப்பாடி செலவழித்த நேரங்களையும், பழகிக் கழித்த நாள்களையும் மீண்டும் அதே நினைவுகளோடு அசைப்போட்டு பார்க்கும் தருணம் அனைவருக்கும் அமைவதில்லை.
பட்டதாரிகளாக பல்கலைக்கழகத்தை விட்டு வெளியேறி, தங்களின் வாழ்க்கை பாதையைத் தனித்தனியாக தொடர்ந்தாலும், பசுமை நிறைந்த அந்த நினைவுகளுக்கு மீண்டும் உயிர்கொடுக்க, சுமார் 30 ஆண்டுகளுக்குப் பிறகு, மலாயாப் பல்கலைக்கழகத்தில் 1995-ஆம் ஆண்டு தங்களின் உயர்கல்வியைத் தொடங்கிய இந்திய மாணவர்கள் நேற்று ஒன்று சேர்ந்தனர்.
வரவில்லாமல் செலவுகள் செய்து மகிழ்ந்திருந்த காலங்களும், வாழ்க்கையின் துன்பங்கள் அறிந்திடாமல் வாழ்ந்திருந்த காலங்களும் அந்த பல்கலைக்கழக நாள்கள் தான்.
பல்கலைக்கழகத்தில் ஒன்றாக பயின்று, அரசியல், கல்வி, மருத்துவம், தொழில்துறை, தகவல் தொழில்நுட்பம் என பல்வேறு துறைகளில் சாதித்து வரும் நண்பர்களைச் சந்தித்து, அவர்களின் வாழ்க்கை பயணங்களைப் பகிர்ந்துக் கொள்வதுடன், இன்றைய தலைமுறையினருக்கு உதவும் வகையிலான நல்ல நட்பு வட்டாரத்தை ஏற்படுத்தும் நோக்கில், இந்த ஒன்றுக்கூடல் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டதாக, அதன் ஏற்பாட்டுக் குழு தலைவர் எம். சரவணன் கூறினார்.
"அனைத்து நண்பர்களும் நல்ல நிலையில் இருக்கின்றனர். ஆக, எங்களுக்குள் எவ்வாறு எங்களின் நட்பை உறுதிப்படுத்திக் கொள்வது என்பதை நோக்கமாகக் கொண்டு இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தோம். அதேபோல, இன்று தங்களின் நிலை என்ன என்பதை தெரிந்துக் கொண்டு, அவர்களால் நம்முடைய சமுதாயத்திற்கு எந்த வகையில் உதவி செய்ய முடியும், நாம் எவ்வாறு அவர்களின் உதவியை நாடுவது போன்ற விஷயங்களைப் பரிமாறி இந்த ஒன்றுக்கூடல் நிகழ்ச்சியை முடித்திருக்கின்றோம்" என்றார் அவர்.
மேலும், இந்த ஒன்றுக்கூடலின் மூலம் பல்கலைக்கழகத்தில் பழகிய நண்பர்களோடு மட்டுமல்லாது, பழகாத முகங்களோடும் நட்பு பிறந்திருப்பது அர்த்தமுள்ள தொடக்கமாக அமைந்திருப்பதாக, ஏற்பாட்டு குழு உறுப்பினர் சூரிய பிரபா பொன்னம்பலம் தெரிவித்தார்.
"ஏறக்குறைய ஒரு 50 நண்பர்களைத் தான் நாங்கள் எதிர்ப்பார்த்தோம். ஆனால், 72 நண்பர்கள் இந்த நிகழ்ச்சிக்குப் பெயர் கொடுத்து, இன்று 65 பேர் இந்நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டார்கள். கல்லூரியில் நாங்கள் பார்க்காத சில முகங்கள், நான்கு வருடங்கள் நாங்கள் கல்வி கற்கும் பொழுது பார்க்க முடியாத முகங்கள் கூட இதில் கலந்து கொண்டது எங்களுக்கு மேலும் வெற்றியையும் மகிழ்ச்சியையும் அளித்தது", என்று அவர் கூறினார்.
30 ஆண்டுகளுக்குப் பிறகு நடத்தப்படும் இச்சந்திப்பிற்காக, வெளிநாடுகளிலிருந்தும் சிலர் வந்திருந்தது நிகழ்ச்சியை மேலும் வெற்றியடைய செய்திருந்ததாக, நந்தகுமார் கோவிந்தன் கூறினார்.
அன்றைய நினைவுகளையும், இன்றைய பயணங்களைப் பகிர்ந்து கொண்ட அந்த நிமிடங்கள், வார்த்தைகளால் விவரிக்க முடியாது என்று அவர் நெகிழ்ச்சி தெரிவித்தார்.
"சிலரை நாம் சந்திக்காமலே இருந்திருக்கலாம். பார்க்காமல், பேசாமல் இருந்திருக்கலாம். முப்பது ஆண்டுகள் கழித்து அனைவரையும் ஒரே இடத்தில் சந்திக்கும் பொழுது மனதிற்கு மகிழ்ச்சியாக இருந்தது. இதில் பலர் வெளி இடங்களிலிருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் வந்திருந்தனர். இந்தோனேசியா, சரவாக் போன்ற பல்வேறு நாடுகளிலிருந்து கலந்துக் கொண்டனர். மிகவும் மகிழ்ச்சியாக இருக்கின்றது", என்று அவர் தெரிவித்தார்.
நேற்று, காலை மணி 9 தொடங்கி மாலை மணி 5 வரை, கோலாலம்பூரில் உள்ள PAUM எனப்படும் Persatuan Alumni Universiti Club House-இல், Reunion Batch 95 எனும் மாணவர்கள் ஒன்றுக்கூடும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)