மலாக்கா, 19 ஜூன் (பெர்னாமா) -- இன்று காலை, கம்போங் பெரிகி ஹங் துவாவில் உள்ள வீடொன்றில், திடீர் மாரடைப்பால் தந்தை இறந்த வேளையில், அவரின் கையில் சிக்கிக்கொண்ட, மூன்று மாத ஆண் குழந்தை ஒன்று மூச்சித் திணறி உயிரிழந்ததாக நம்பப்படுகிறது.
காலை மணி 9.30-க்கு தாம் வீடு திரும்பிய போது, நூருல் எஃபெண்டி இப்ராஹிம் எனும் 35 வயதுடைய தமது கணவர் சுயநினைவற்ற நிலையில் இருந்ததாகவும், முஹமட் நூர் டேனியல் நூருல் எஃபெண்டிஎனும் தமது குழந்தை, அவரின் கையின் கீழ் கிடந்ததாகவும் உயிரிழந்தவரின் மனைவியான அசுரா அப்துல் மாலிக் கூறினார்.
நேற்றிலிருந்தே நெஞ்சு வலிப்பதாக நூருல் எஃபெண்டி கூறியதாகவும், எனினும் சிகிச்சையகத்திற்குச் செல்ல மறுத்ததாகவும் அவரின் தங்கையான 33 வயதுடைய மஸ்துராடியானா இப்ராஹிம் கூறினார்.
வீட்டின் முன் வாசல் கதவு பூட்டி இருந்த நிலையில், கணவனைத் தொடர்புகொள்ள முடியாமல் மனைவி அசுரா அவர்கள் வீட்டின் பின்புறத்தில் உள்ள ஜன்னல் வழியாகவே உள்ளே நுழைந்திருக்கின்றார்.
இதனிடையே, இச்சம்பவம் குறித்து காலை மணி 9.58-க்கு தங்கள் தரப்பிற்கு மருத்துவமனை தரப்பிடமிருந்து அழைப்பு கிடைத்ததாக, புக்கிட் கட்டில் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலைய மூத்த அதிகாரி முஹமட் சுபியன் முஹமட் டாலி கூறினார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)