Ad Banner
Ad Banner
Ad Banner
Ad Banner
 சிறப்புச் செய்தி

சீனர்கள் ஆதிக்கம் படைக்கும் 'அபக்கஸ்'-இல் தமிழ்ப்பள்ளி மாணவி டிக்‌ஷா சாதனை

19/06/2025 06:47 PM

ரவாங், 19 ஜூன் (பெர்னாமா) - சீனர்களின் பாரம்பரிய கணிப் பொறியான ABACUS எனும் மணிச்சட்டத்தின் பயன்பாடு குறித்து ஆரம்பப் பள்ளிகளில் தற்போது போதிக்கப்பட்டு வந்தாலும் சீன மாணவர்களைத் தவிர்த்து மற்றவர்கள் அதில் ஆர்வம் காட்டுவது குறைவாகும். 

அந்த பிம்பத்தை உடைத்து கவனம் ஈர்த்திருக்கின்றார் ரவாங் தமிழ்ப்பள்ளியைச் சேர்ந்த ஐந்தாம் ஆண்டு மாணவி டிக்‌ஷா யோகேஸ்.

அண்மையில் சீனா, மாக்காவில் நடைபெற்ற அனைத்துலக எண் கணிதம் 'அபக்கஸ்'   போட்டியில் கலந்து கொண்ட இவர் தமது அபார திறனாற்றலை வெளிப்படுத்தி தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.

2025 Guangdong - Hong Kong - Macau - Taiwan Youth Abacus என்ற அப்போட்டியில் உலக அளவில் 488 மாணவர்கள் கலந்து கொண்ட வேளையில்,  மலேசியாவைப் பிரதிநிதித்து சென்ற ஒரே இந்திய மாணவி டிக்‌ஷா ஆவார்.

மணிச்சட்டத்தின் பயனையும் அதனை எவ்வாறு கையாண்டு கணிதப் பாடத்தை எளிமையாக பயில்வது என்பதை அறிந்ததும் மகளின் அனுமதியோடு நான்கு வயது தொடங்கி அவரை மணிச்சட்ட பயிற்சி வகுப்பிற்கு அனுப்பியதாக  டிக்‌ஷாவின் தாயார் ஹேமா சுப்பிரமணியம் தெரிவித்தார்.

அப்பயிற்சியை சீனர் கற்றுக் கொடுத்ததால் மொழிப் பிரச்சனை ஏற்படக் கூடாது என்பதற்காக சீன மொழி பயில்வதற்கும் அவருக்கு ஏற்பாடு செய்ததாக ஹேமா கூறினார்.

மணிச்சட்டப் பயிற்சியில் முதல்கட்டப் பயிற்சியை நிறைவு செய்ததும் உள்நாட்டில் நடைபெற்ற போட்டியில் கலந்து கொண்டு டிக்‌ஷா மூன்றாவது நிலையில் தேர்ச்சி பெற்றார்.

நான்காம் நிலையை நிறைவு செய்வதற்குள், பயிற்சி ஆசிரியரின் துணையுடன் டிக்‌ஷா பல போட்டிகளில் கலந்து வெற்றி பெற்றுள்ளதாகவும் ஹேமா விவரித்தார்.

"அபக்கஸ்-சை பயன்படுத்துவதன் மூலம் கணிதப் பாடத்தை இலகுவான முறையில் கொள்ளலாம். அனைத்து நிலைகளிலும் மாறுபட்ட கணித முறையை பயிற்றி பெற்று வருவார்கள். டிக்‌ஷாவும் அதிகமான போட்டிகளில் பங்கெடுத்து இருக்கிறார். இதற்கு முன்னர் பல பிரிவுகளில் வெற்றி பெற்றிருந்தாலும். தங்கம் வென்றது இதுவே முதன் முறையாகும்," என்று ஹேமா சுப்பிரமணியம் தெரிவித்தார். 

வாரத்திற்கு ஒரு முறை என இரண்டு மணி நேரத்திற்கு இந்த வகுப்பு நடைபெற்றாலும், ஏழு நாட்களுக்கும் எண் கணிதம் மற்றும் மன எண் கணிதப் பயிற்சிகளை ஆசிரியர் அவருக்கு வழங்குவதால்...

ஓய்வு நேரம் முழுவதும் டிக்‌ஷா எவ்வித துணைக்கருவியையும் பயன்படுத்தாது, வெறும் மனக் கணக்கின் மூலமாகவே அனைத்து பயிற்சிகளையும் துரிதமாக செய்வார் என்று ஹேமா தெரிவித்தார்.

தமது மகளின் சாதனையில் பெருமை கொள்வதோடு, தொடர்ந்து அவரை அடுத்தகட்ட பயிற்சிக்கு ஊக்குவிக்கும் முயற்சிகளை தாம் மேற்கொள்ளப் போவதாக ஹேமா உறுதியுடன் கூறினார்.

இதனிடையே, இதற்கு முன்னர் தாம் கலந்து கொண்ட சில போட்டிகள் குறித்து மாணவி டிக்‌ஷா பகிர்ந்து கொண்டார்.

"சிங்கப்பூரிலும் இந்தோனேசியாவிலும் எனக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்திருந்தது. அதேபோல மலேசியாவில் இருமுறை நடைபெற்ற போட்டிகளில் நான்காம் மற்றும் ஐந்தாம் இடங்களைப் பிடித்திருந்தேன். பல பயிற்சிகளுக்கு பின்னர் இம்முறை சீனாவில் நடைபெற்ற போட்டியில் கலந்து தங்கப் பதக்கம் வென்றது எனக்கு மட்டற்ற மகிழ்ச்சியை அளிக்கிறது," என்று டிக்‌ஷா யோகேஸ்  தெரிவித்தார். 

அதேவேளையில், தமிழ்ப்பள்ளி மாணவர்கள் ABACUS-சை கற்றுக் கொள்வதற்கு தாமே முன்னுதாரணமாக விளங்கப் போவதாகவும் அவர் தெரிவித்தார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)