ஜோகூர் பாரு, 12 ஜூன் (பெர்னாமா) - கடந்த ஏப்ரல் மாதம் பொருள் அனுப்பும் சேவை மூலம் 10.194 கிலோ கிராம் எடைக் கொண்ட ஒன்பது லட்சத்து 55-ஆயிரத்து 687 ரிங்கிட் மதிப்பிலான போதைப் பொருளை விநியோகிக்கவிருந்த முயற்சியை, ஜோகூர், அரச மலேசிய சுங்கத் துறை JKDM முறியடித்தது.
கடந்த ஏப்ரல் 23-ஆம் தேதி மாலை மணி 3.35-க்கு ஜோகூர் பாருவில் உள்ள பொருள் அனுப்பும் மையம் ஒன்றில், ஹாங்காங்கில் இருந்து வந்த இரு பெட்டிகளின் மீது சோதனை மேற்கொள்ளப்பட்டதாக, ஜோகூர் சுங்கத் துறை இயக்குநர் அமிருல் இஸ்மீர் முஹமட் சொஹாய்மி தெரிவித்தார்.
"ஒவ்வொரு பெட்டியையும் ஆய்வு செய்ததன் விளைவாக எங்கள் படை இரண்டு இனிப்புப் பொட்டலங்களைக் கண்டறிந்தது. அவை கருப்பு திரவம் கொண்ட வெள்ளை பாட்டிலின் மேல் வைக்கப்பட்டிருந்தன. கருப்பு திரவத்தின் தொடக்கக்கட்ட சோதனை மற்றும் பரிசோதனையில் அது மோர்ஃபின் வகை போதைப்பொருள் என்று கண்டறியப்பட்டது," என்றார் அவர்.
ஜோகூர், பூலாயில் உள்ள இரட்டை மாடி வீடொன்றில் வசிக்கும் ஒருவருக்கு அவ்விரு பெட்டிகளும் அனுப்பப்பட்டிருந்த நிலையில், அவற்றில் உணவு என்று முத்திரையிடப்பட்டிருந்ததாக அமிருல் கூறினார்.
எனினும், வீட்டின் உரிமையாளர் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வரும் நிலையில், இதில் சம்பந்தப்பட்டுள்ள கும்பலையும் அப்பெட்டிகளின் உரிமையாளரையும் அடையாளம் காண்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)
© 2025 BERNAMA • உரிமைத் துறப்பு • தனியுரிமைக் கொள்கை • பாதுகாப்பு கொள்கை