ஈப்போ, 11 ஜூன் (பெர்னாமா) - ஜூன் 9-ஆம் தேதி ஜாலான் ராயா திமோர் - பாராட் JRTB-இல்,15 உயிர்களைப் பலிகொண்ட விபத்தில் சம்பந்தப்பட்ட பேருந்து ஓட்டுநர் எந்தவொரு தரப்பினருக்கும் பகிரங்கமாக எந்த கருத்துகளையும் வெளியிட வேண்டாம் என்று போலீஸ் அறிவுறுத்தியுள்ளது.
தற்போது தைப்பிங் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அவரின் அந்நடவடிக்கை, போலீசாரின் விசாரணைக்கு இடையூறு ஏற்படுத்துவதாக பேராக் மாநில போலிஸ் தலைவர் டத்தோ நூர் ஹிசாம் நோர்டின் கூறினார்.
"நிறைய கேள்விகள் உள்ளன. இந்த பேருந்து ஓட்டுநர் மருத்துவமனையில் இருந்து திரும்ப அனுமதிக்கும் வரையில், அவரை இன்னும் தடுப்புக் காவலில் வைக்க முடியாது. ஆகவே, இந்த ஓட்டுநர் எந்தவொரு கருத்தையும் வெளியிட வேண்டாம் என்று நான் அறிவுறுத்த விரும்புகிறேன். ஏனெனில், அது விசாரணைக்கு இடையூறாகும்," என்றார் அவர்.
மருத்துவமனையில் சிகிச்சை நிறைவடைந்ததும் சம்பந்தப்பட்ட பேருந்து ஓட்டுநரிடம் இருந்து போலீசார் வாக்குமூலம் பெறுவார்கள் என்றும் நூர் ஹிசாம் கூறினார்.
மேலும், விபத்தில் சிக்கிய உப்சி மாணவர்கள் உட்பட பல தரப்பினரை உள்ளடக்கி
18 பேர், அச்சம்பவம் தொடர்பில் இதுவரை வாக்குமூலம் அளித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
கடந்த திங்கட்கிழமை, திரெங்கானு ஜெர்த்தெவில் இருந்து பேராக், தஞ்சோங் மாலிம் நோக்கி சென்றுக்கொண்டிருந்தபோது அப்பேருந்து கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் சுல்தான் இட்ரிஸ் ஆசிரியர் பயிற்சி பல்கலைக்கழகம் உப்சி-யைச் சேர்ந்த 15 மாணவர்கள் பலியாகினர்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)