கோலாலம்பூர், 28 மே (பெர்னாமா) -- சோர்வு காரணமாக தேசிய இருதய சிகிச்சைக் கழகம், I-J-N-னில் சிகிச்சை பெற்று வரும் புருணை சுல்தான் சுல்தான் ஹஸ்னால் பொல்கியாவின் உடல்நிலை சீராகவும் நல்ல நிலையிலும் இருக்கிறது.
தமது துணைவியார் பெங்கிரான் அனாக் சலேஹா துணையுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சுல்தான் ஹஸ்னால் பொல்கியாவுக்கு இன்னும் மருத்துவக் குழுவின் கண்காணிப்பு தேவைப்படுவதாக பிரதமர் அலுவலகம் இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
சிகிச்சைக்கான செயல்முறைகள் சீராக நடைபெறுவதை உறுதி செய்ய, அரசக் குடும்பத்தாரைத் தவிர்த்து, வேறு எவரும் புருணை சுல்தானை சந்திக்க வேண்டாம் என்றும் மருத்துவக் குழு அறிவுறுத்தியதாக பிரதமர் அலுவலகம் கூறியது.
பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வாரும் அவரின் துணைவியார் டத்தோ ஶ்ரீ டாக்டர் வான் அசிசாவும், புருணை சுல்தானை நலம் விசாரிக்க IJN சென்றதாகவும் அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் புருணை சுல்தான் விரைவில் குணமடைய மலேசியர்கள் அனைவரும் அவருக்காக பிரார்த்தித்து கொள்ளுமாறு அதே அறிக்கையில் அன்வார் கேட்டுக் கொண்டார்.
"நல்ல முறையில் அவர் ஓய்வு எடுத்து கொள்ளட்டும். அவரை அதிகமானோர் சந்திக்க விரும்புகின்றனர்," என்றார் அவர்.
இன்று புத்ராஜெயாவில் நடைபெற்ற 2025 ஆசியான் தணிக்கையாளர் மாநாட்டின் நிறைவு விழாவிற்கு பின்னர் செய்தியாளர்களிடம் அவர் அவ்வாறு கூறினார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ) 502