Ad Banner
Ad Banner
Ad Banner
Ad Banner
Ad Banner
 சிறப்புச் செய்தி

உலகெங்கிலும் 24 மணி நேரத்திற்கு இணையம் இல்லாமல் போனால் என்னவாகும்?

22/05/2025 08:28 PM

கோலாலம்பூர், 22 மே (பெர்னாமா) -- இன்றைய நவீன உலகம் இணையத்தில் இயங்குகிறது என்றால் அது மிகையில்லை.

உலக மக்கள் தொகையில் மூன்றில் இரண்டு பகுதியினர், அதாவது 540 கோடிக்கும் மேற்பட்டோர் தங்களின் தினசரி வாழ்க்கையில் ஆறிலிருந்து ஏழு மணி நேரத்திற்கு இணையத்தைப் பயன்படுத்துவதாகக் கடந்தாண்டின் தரவு கூறுகிறது.

97.4 விழுக்காட்டு மலேசியர்களும் அப்பட்டியலில் இணைவதாக அத்தரவு காட்டுகின்றது.

இவ்வேளையில், திடீரென 24 மணி நேரத்திற்கு இணையம் இல்லாத ஒரு சூழல் நிலவினால் என்ன ஆகும்? மக்கள் சிலரை கேட்டோம். 

''இணையம் இல்லாவிடில் ஒன்றுமே நடக்காது. வேலை முழுவதும் இணையம் சார்ந்தே உள்ளது. அனைத்தும் என் திறன்பேசியில் உள்ளது. எனவே, இணையம் இல்லாத ஒரு நாள் கடினமான ஒன்றுதான்,'' என்று மாலதி சண்முகம் தெரிவித்தார்.

''ஏதும் தேடல் இருந்தால் நான் கூகள் சென்றுதான் தேடுவேன். தற்போது ChatGPT. இவை எதுவுமே இல்லை என்றால் சிரமம்தான். சில மணி நேரம் ஏற்றுக்கொள்ளலாம். ஆனால், ஒரு நாள் முழுவதும் முடியாது,'' என்றார் சுபாஷினி பிரான்சிஸ்.

''தினசரி பொழுதுபோக்கே இணையம்தான். புதிய இடங்களுக்குச் செல்வதென்றாலும் பாதையைக் கண்டறிய இணையம் தேவை. எது செய்வதென்றாலும் இணையம் தேவை. அப்படியொரு சூழலாகி விட்டது,'' என்று திவ்யா ஜெகதீசன் கூறினார்.

இணையத்தை அதிகம் சார்ந்து வாழ்ந்தாக வேண்டிய நிலை ஏற்பட்டாலும், அந்த இணைப்பு இல்லாமல், நிம்மதியுடன் வாழ முடியும் என்று கூறுபவர்களும் உள்ளனர்.

''தொடக்கத்தில் மனவுளைச்சல் ஏற்படலாம். ஆனால், கண்டிப்பாக நிம்மதியுடன் வாழ முடியும். சமூக ஊடகத்தினால் உண்டாகும் கவனச்சிதைவு இருக்காது. நம்மை கட்டாயப்படுத்தி நிறுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டாலும் நிம்மதியாக இருக்கலாம் என்று நினைக்கிறேன்,'' என்றார் கலையரசி சேகர் அரசன்.

அதிமானோரின் வாழ்க்கையில் ஆதிக்கம் செலுத்தும் இணையத்தில் தடை ஏற்பட்டால் எம்மாதிரியான மனோவியல் சிக்கல்களை அவர்கள் எதிர்நோக்கக்கூடும் என்பது குறித்து மனநல ஆலோசகர் தேவி வெனாஷினி முருகேஷை பெர்னாமா செய்திகள் கேட்டறிந்தது.

''இணையம் என்பது தொடர்பை ஏற்படுத்தக்கூடிய ஓர் ஊடகம். திடீரென அனைத்தும் நிறுத்தப்படும்போது அது பயம் கலந்த குழப்பத்தை ஏற்படுத்தும். அதிகமான மனவுளைச்சலையும் உண்டாக்கும்,'' என்றார் அவர்.

தனிமையை உண்டாக்கும் சாத்தியமும் இந்த இணையத் துண்டிப்பினால் ஏற்படும் என்று அவர் கூறினார்.

அதுமட்டுமின்றி, எதிலும் கவனம் செலுத்த முடியாமல் அவர்கள் மனவுளைச்சலை எதிர்நோக்கவும் நேரிடும் என்பதையும் தேவி வெனாஷினி மறுக்கவில்லை.

''20 வினாடிகளுக்கு மேல் எந்தவொரு விஷயத்திலும் கவனம் செலுத்த முடியாது. இதனை மனோவியல் ரீதியில் instant gratification என்றும் கூறுவர். அதுமட்டுமின்றி, இணையத்தில் கிடைக்கும் dopamine heat எனப்படும் உடனடி பதில் கிடைக்காமல் போகும் பட்சத்தில் ஒருவர் மிகுந்த மனவுளைச்சலை ஏற்படுத்தும் சாத்தியம் அதிகம். அதிகமான இணையப் பயன்பாடு சமசீரான வாழ்க்கை முறையையும் பாதிக்கும்,'' என்றார் அவர்.

இணையத்தை அதிகம் சார்ந்திராமல் எவ்வாறு வாழ முடியும் என்று அவர் இவ்வாறு விவரித்தார்.

''24 மணி நேரம் இணையம் இல்லாவிடில் நாம் எவ்வளவு பாதிக்கப்படுகிறோம். இதுதான் நாம் அதை அதிகம் சார்ந்துள்ளோம் என்பதற்கான அர்த்தம். எனவே, இதனை ஒரு பொது நினைவுறுத்தலாக எடுத்துக்கொள்ளுங்கள். இணையத்திலிருந்து இடைவெளி எடுத்துக்கொண்டால்தான் நம்மை சுற்றியுள்ளவர்கள் உட்பட, நமக்கான தொடர்பை நாமே ஏற்படுத்திக்கொள்ள முடியும்,'' என்றார் அவர்.

இணையத்தின் பயன்பாடு அதிகமாக இல்லாத காலக்கட்டத்தின் வாழ்க்கையை அவ்வப்போது வாழ முயற்சித்தாலே, இன்றைய அவசர உலகை, சற்று நிதான உலகாக மாற்ற முடியும் என்று தேவி வெனாஷினி வலியுறுத்தினார்.

--பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]