நியூயார்க், 03 ஜூன் (பெர்னாமா) -- காசாவில் உணவுகளை விநியோகிக்கும் இடத்திற்கு அருகே இஸ்ரேல் இராணுவம் மேற்கொண்ட தாக்குதலை, ஐக்கிய நாடுகள் சபை, ஐ.நா கடுமையாகச் சாடியிருக்கிறது.
இச்சம்பவம் குறித்து சுதந்திரமான விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று ஐ.நா பொது செயலாளர் அந்தோனியோ குட்டெரஸ் அறிவுறுத்தியிருப்பதாக அவரின் பேச்சாளர் ஸ்டெஃபான் ஜுஜாரிக் கூறினார்.
''மனிதாபிமானக் கொள்கைகளை முழுமையாக மதிக்கும் நிலைமைகளின் கீழ், ஐக்கிய நாடுகள் சபை பாதுகாப்பாகச் செயல்பட அனுமதிக்கப்பட வேண்டும். உடனடி, நிரந்தர மற்றும் நீடித்த போர்நிறுத்தத்திற்குப் பொதுச்செயலாளர் தொடர்ந்து அழைப்பு விடுத்துள்ளார்,'' என்றார் அவர்.
உணவுக்காக பாலஸ்தீனியர்கள் தங்கள் உயிரைப் பணயம் வைப்பது ஏற்றுக்கொள்ள முடியாது என்று ஸ்டெஃபான் ஜுஜாரிக் குறிப்பிட்டார்.
பாதிக்கப்பட்ட காசா மக்களுக்கு உதவிகளை வழங்கும் பொருட்டு, உடனடி மற்றும் நிரந்தர போர் நிறுத்தத்திற்கு ஐ.நா. அழைப்பு விடுத்ததுள்ளது.
உணவுகளை விநியோகம் செய்யும் இடத்திற்கு அருகே கூடியிருந்த பாலஸ்தீன மக்கள் மீது இஸ்ரேல் இராணுவம் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக பெண்கள் உட்பட 31 பேர் கொல்லப்பட்டனர்.
மேலும், 150 பேர் காயமடைந்தனர்.
--பெர்னாமா
[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]