கோலாலம்பூர், 03 ஜூன் (பெர்னாமா) - அமெரிக்காவிற்கான புதிய மலேசிய தூதராக டான் ஶ்ரீ முஹமட் ஷாருல் இக்ராம் யாக்கோப் நியமிக்கப்பட்டுள்ளார்.
இன்று, இஸ்தானா நெகாராவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் மாட்சிமைத் தங்கிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிம், அமெரிக்காவிற்கான மலேசியத் தூதரின் நியமனக் கடிதத்தை முஹமட் ஷாருலிடம் ஒப்படைத்தார்.
1988-ஆம் ஆண்டு ஆண்டு வெளியுறவு அமைச்சில் நிர்வாக மற்றும் அரசதந்திர அதிகாரியாக தமது பணியைத் தொடங்கிய முஹமட் ஷாருல், பின்னர் 2019-ஆம் ஆண்டு ஜனவரி ஆறிலிருந்து 2022-ஆம் ஆண்டு மே 31-ஆம் தேதி வரை அதே அமைச்சில் தலைமைச் செயலாளராகவும் பொறுப்பு வகித்தார்.
பொது சேவை துறையில் சுமார் 35 ஆண்டுகளாகப் பணியாற்றி வரும் அவர், கத்தாருக்கான மலேசிய தூதர், ஆஸ்திரியாவிற்கான மலேசிய தூதர், அமெரிக்கா, நியூயார்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் சபைக்கான மலேசியாவின் நிரந்தர பிரதிநிதியாகவும் நியமிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
வெளியுறவு அமைச்சில் பணியாற்றிய காலக்கட்டத்தில் இருதரப்பு உறவுகளுக்கான துணைப் பொதுச் செயலாளர், 2015-ஆம் ஆண்டு ஆசியான்-மலேசியா தேசிய செயலகத்தின் தலைமை இயக்குநர் உட்பட பலதரப்பு அரசியல் பிரிவின் செயலாளர் ஆகிய பொறுப்புகளையும் முஹமட் ஷாருல் வகித்து வந்தார்.
வியன்னா, ஆஸ்திரியா; அமெரிக்கா, வாஷிங்டன் டி.சி; மற்றும் சீனா, பெய்ஜிங்கில் உள்ள மலேசிய தூதரங்களிலும் முன்னதாக அவர் அரசதந்திர பணிகளில் ஈடுபட்டு வந்தார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)