புது டெல்லி, 03 ஜூன் (பெர்னாமா) -- இந்தியாவில் கார்களை உற்பத்தி செய்ய அமெரிக்காவின் மின்சார கார் உற்பத்தி நிறுவனமான டெஸ்லா எண்ணம் கொண்டிருக்கவில்லை என்று இந்தியாவின் கனரகத் தொழில்கள் துறை அமைச்சர் எச்.டி குமரசுவாமி தெரிவித்தார்.
மின்சார வாகனக் கொள்கையை இந்தியா இறுதி செய்து வரும் நிலையில், மின்சார வாகனங்களை இறக்குமதி செய்வதற்கே முன்னுரிமை அளிக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.
இந்தியாவின் மின்சார வாகன உற்பத்தி தொழில்துறையில் முதலீடு செய்வதாக உறுதியளிக்கும் வெளிநாட்டு வாகன உற்பத்தி நிறுவனங்களுக்கு இறக்குமதி வரிகளை இந்தியா கணிசமாகக் குறைத்ததை குமரசுவாமி சுட்டிக்காட்டினார்.
கடந்த ஓராண்டாகச் செயல்பாட்டில் இருந்த இக்கொள்கை, டெஸ்லா நிறுவனத்தை முதலீடு செய்ய வடிவமைக்கப்பட்டதாக அவர் விளக்கினார்.
ஆனால் அதன் தலைமை நிர்வாக அதிகாரி இலோன் மஸ்க் கடந்தாண்டு இந்தியாவிற்கான தமது முதலீட்டுத் திட்டங்களை நிறுத்தியதால் இக்கொள்கை மறுமதிப்பீடு செய்யப்படும் என்று குமரசுவாமி தெரிவித்தார்.
"டெஸ்லா, நாங்கள் உண்மையில் அவர்களிடமிருந்து எதிர்பார்க்கவில்லை. அவர்கள் இரண்டு விற்பனை கடைகளை தொடங்க மட்டுமே உள்ளனர். அவர்கள் இந்தியாவில் உற்பத்தி செய்வதில் ஆர்வம் காட்டவில்லை," என்றார் அவர்.
இருப்பினும், மெர்சிடிஸ் பென்ஸ், வொல்ஸ்வேகன், ஹியுண்டாய் மற்றும் கியா ஆகிய வாகன உற்பத்தி நிறுவனங்கள் இந்தியாவின் மின்சார வாகன உற்பத்திக் கொள்கையில் ஆர்வம் கொண்டிருப்பதாக அவர் கூறினார்.
--பெர்னாமா
[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]