லாகூர், 01 ஜூலை (பெர்னாமா) -- பாகிஸ்தானின் கிழக்கு நகரமான லாகூரில், ஒரு பயிற்சி மையத்தின் கூரை இடிந்து விழுந்ததில் 14 சிறுவர்கள் உயிரிழந்ததாக மீட்புப் பணியாளர்கள் தெரிவித்தனர்.
அலட்சியத்தின் காரணமக இந்தச் சம்பவம் நேர்ந்ததா என்பதை விசாரிக்கும் அடுத்தக்கட்ட நடவடிக்கைகளைத் அதிகாரிகள் தொடங்கியுள்ளனர்.
பள்ளி நேரத்திற்கு பிறகு செயல்படும், அந்தத் தனியார் பயிற்சி மையத்தின் இடிபாடுகளுக்கு அடியில் சிக்கிய சிறுவர்களோடு 30 வயது ஆசிரியை ஒருவரையும் மீட்புக் குழுவினர் கண்டுபிடித்தாக பஞ்சாப் அவசரகாலச் சேவைப் பிரிவு கூறியது.
உயிரிழந்த சிறுவர்கள் 5 முதல் 16 வயதுக்குட்பட்டவர்கள் எனவும் அவர்களில் பெரும்பாலானோர் 9 வயதிற்குக் குறைவானவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அப்பயிற்சி மையம் பதிவு செய்யப்படாமல், பாழடைந்த கூரையைக் கொண்ட ஒரு தனியார் குடியிருப்புக் கட்டிடத்தினுள் இயங்கி வந்தது, தொடக்கக்கட்ட விசாரணையில் தெரிய வந்ததாக பஞ்சாப் தகவல் அமைச்சர் அஸ்மா பொக்காரி கூறினார்.
இந்நிலையில், பருவமழை காலத்திற்கு முன்னதாக பாதுகாப்பற்ற கட்டிடங்களை ஆய்வு செய்யவும், பதிவு செய்யப்படாத பயிற்சி மையங்கள் மற்றும் தனியார் கல்வி கழகங்களுக்கு கடுமையான விதிமுறைகளை அறிமுகப்படுத்தவும் பஞ்சாப் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
--பெர்னாமா
[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)]