மாரான், ஏப்ரல் 01 (பெர்னாமா) -- இன்று மாரான் ஶ்ரீ மரத்தாண்டவர் ஆலயத்தில் கொண்டாடப்பட்ட பங்குனி உத்தரத் திருவிழாவிற்கு வருகை புரிந்திருந்த தேசிய ஒருமைப்பாட்டு துணை அமைச்சர் யுனேஸ்வரன் ராமராஜ், ஆலயத்தில் நிறுவப்படவிருக்கும் திருவள்ளுவர் சிலைக்கு தமது பங்களிப்பாக 7,000 ரிங்கிட் நிதி வழங்கினார்.
தமிழ் மொழியின் பெருமையையும் வள்ளுவப் பெருந்தகையின் போதனைகளையும் அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் நோக்கத்தில் மேற்கொள்ளப்படும் இந்தச் சிலை அமைக்கும் முயற்சியை தாம் பாராட்டுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
"இந்த பங்குனி உத்திரத் திருவிழாவில் நிறைய பக்தர்களை சந்தித்தோம். இப்புனிதமான நாளை முன்னிட்டு ஆலயத்தில் பல கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. அவற்றுடன் சில முக்கிய சிலைகளும் வைக்கப்படுகின்றன. அவற்றில் வள்ளுவர் சிலர் நிறுவுவதற்கு என் சார்பில் நான் ஏழாயிரம் ரிங்கிட் நிதிக்கான காசோலையை இன்று ஆலய நிர்வாகத் தரப்பிடம் ஒப்படைத்தேன்," என்றார் அவர்.
இதனிடையே, துணையமைச்சரிடமிருந்து காசோலையைப் பெற்றுக் கொண்ட ஆலயப் பொறுப்பாளர்களில் ஒருவரான மருதவேலு நாராயணசாமி, திருவள்ளுவருடன் சேர்த்து 18 சித்தர்களின் சிலைகளும் ஆலயத்தில் நிறுவப்பட்டு அடுத்த நான்கு மாதங்களில் திறப்பு விழா காணும் என்று கூறினார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)