புக்கிட் அமான், 19 மார்ச் (பெர்னாமா) -- கடந்த செவ்வாய்க்கிழமை மத போதகர் சம்ரி வினோத்தை கைவிலங்கிட்டு நீதிமன்றத்திற்கு அழைத்து வந்த நடவடிக்கை, நடப்பில் உள்ள நடைமுறைகள் மற்றும் சட்ட விதிகளுக்கு ஏற்பவே மேற்கொள்ளப்பட்டது.
குற்றவியல் சட்டம் செக்ஷன் 505-இன் கீழ் ஒரு வழக்கை உட்படுத்தி சம்ரியின் முதல் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதோடு, மாறுபட்ட நடைமுறை தேவைப்படும் நிந்தனைச் சட்டத்தின் கீழும் அவர் விசாரிக்கப்படுவதாக தேசிய போலீஸ் படை தலைவர் டத்தோ ஶ்ரீ முஹமட் காலிட் இஸ்மாயில் விளக்கினார்.
"நாங்கள் இதற்கு முன்பு கைது செய்த குற்றங்கள் பலதரப்பட்டவை. சில ஜாமீன் வழங்கக்கூடியவை, சில ஜாமீன் வழங்க முடியாதவை எனப் பலவகைப்படும். எனவே, தொடக்கக்கட்டமாக நாங்கள் கைது நடவடிக்கைகளை மேற்கொண்டோம். அன்று நான் புத்ராஜயாவில் தெரிவித்த செக்ஷன் 505-இன் கீழ் நான்கு வழக்குகள். ஆனால், நிந்தனைச் சட்டம் தொடர்பான மற்றொரு வழக்கும் இருந்தது. ஆகவே, இந்த நடவடிக்கைகள் சட்டத்தின் அடிப்படையிலேயே எடுக்கப்பட்டன", என்றார் அவர்.
இந்த செயல்முறை வேறுபாடு பொதுமக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தக்கூடும் என்று டத்தோ ஶ்ரீ முஹமட் காலிட் விவரித்தார்.
இருப்பினும், அனைத்து செயல்முறைகளும் சட்ட விதிகளுக்கு இணங்கவும், நாட்டின் சட்ட அமைப்பில் உள்ள பொதுவான நடைமுறைகளுக்கு ஏற்பவும் மேற்கொள்ளப்பட்டதாக அவர் உத்தரவாதம் அளித்தார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)