ஜோகூர் பாரு, 14 மார்ச் (பெர்னாமா) -- 2022-ஆம் ஆண்டு மார்ச் 15-ஆம் தேதி, ஜோகூரின் 19வது மந்திரி புசாராக மாநில அரசு நிர்வாகத்தை வழிநடத்த டத்தோ டத்தோ ஓன் ஹஃபிஸ் காஸி பதவியேற்றபோது அவருக்கு அது ஓர் அர்த்தமுள்ள தருணமாக அமைந்தது.
கொவிட்-19 தொற்றுநோய் மற்றும் சிங்கப்பூருடனான எல்லை மூடப்பட்டதால் ஜோகூரில் பொருளாதார மற்றும் சுற்றுலாத் துறைகள் சவாலான காலங்களை எதிர்கொண்டிருந்தபோது 44 வயதில் மாநிலத்தை வழிநடத்தும் பெரிய பொறுப்பை ஏற்றுக்கொள்வது நிச்சயமாக எளிதான காரியமல்ல.
இருப்பினும், நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, முக்கிய அரசியல் குடும்பத்தைச் சேர்ந்த அவர், ஜோகூர் அரண்மனையின் அறிவுரை மற்றும் ஆணைப்படி, ஜோகூரை சொந்த பாணியில் வழிநடத்துவதில் தமது திறனை நிரூபித்திருக்கிறார்.
ஜோகூரின் பொருளாதார வளர்ச்சி மற்றும் அதிகரித்த மாநில வருவாய் ஆகியவை மாநில அரசாங்கத்தை நிர்வகிப்பதில் தமது நான்கு ஆண்டுக் கால நேர்மறையான செயல்திறனைப் புலப்படுத்தியிருப்பதாக ஓன் ஹஃபிஸ் கூறினார்.
தமது நிர்வாகத்தின் தொடக்கத்தில் 200 கோடி ரிங்கிட்டிற்கும் குறைவாக இருந்த மாநில வருவாய், கடந்த ஆண்டு சுமார் 267 கோடி ரிங்கிட்டாக அதிகரித்துள்ளது.
மேலும் எரிவாயு வருவாய் உள்ளிட்ட தற்போதைய கணிப்புகளின் அடிப்படையில், ஜோகூர் 300 கோடி ரிங்கிட்டிற்கும் அதிகமாகப் பதிவு செய்யும் திறனைக் கொண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
மேலும், கடந்த ஆண்டு ஜோகூர் 11,000 கோடி ரிங்கிட் மதிப்புள்ள முதலீட்டைப் பதிவு செய்த மாநிலமாக அறிவிக்கப்பட்டது.
இது ஓன் ஹஃபிஸ் நிர்வாகத்தின் நான்காவது ஆண்டு நிறைவிற்கான பரிசாக அமைந்ததுள்ளது.
இருப்பினும், மாநில அரசின் செயல்திறன் மற்றும் வெற்றிகள், முதலீட்டுப் புள்ளிவிவரங்கள் அல்லது எண்ணிக்கை வழி மட்டும் அளவிடப்படுவதில்லை.
மாறாக அவை ஜோகூர் அரண்மனை மற்றும் மக்களிடமிருந்து பெறப்படும் கருத்துக்களைப் பொறுத்தது என்று அவர் விளக்கினார்.
"அதனால்தான் மாநிலத்தின் ஒவ்வொரு வருவாயும், அது மக்களுக்கே திருப்பித் தரப்படுவதை நாங்கள் உறுதிசெய்கிறோம். இந்த ஆண்டு மட்டுமல்ல, இரண்டு அல்லது மூன்று வருடங்களாக ஒவ்வொரு முறையும் மாநில வருவாயைப் பெறும்போதும், அது மக்களுக்கே திருப்பித் தரப்படுவதை நாங்கள் உறுதிசெய்கிறோம்," என்று அவர் கூறினார்.
வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு ஜோகூர் ஒரு முக்கிய இடமாக மாற உதவும் காரணங்களில் மாநிலக் கொள்கைகள் மற்றும் நிலைத்தன்மையும் அடங்கும் என்று பிரிட்டன், ஹெர்ட்ஃபோர்ட்ஷயர் பல்கலைக்கழகத்தின் கணக்கியலில் இளங்கலைப் பட்டதாரியான ஓன் ஹஃபிஸ் குறிப்பிட்டார்.
"ஜோகூருக்கு தற்போது அனைத்து வாய்ப்பும் உள்ளன. மக்கள் நீண்ட காலமாக ஜோகூரின் ஆற்றலைப் பற்றிப் பேசி வருகின்றனர். மேலும் இந்த தலைமையின் கீழ் அந்த ஆற்றல் யதார்த்தமாக மாறுவதை நாங்கள் உறுதி செய்ய விரும்புகிறோம்.
"இது மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் மற்றும் ஜோகூர் சுல்தான் துங்கு மக்கோத்தா இஸ்மாயில் ஆகியோர் மாநிலம் வளர்ச்சியடைவதைக் காண்பதில் தீவிரமாக உள்ளனர். அதே நேரத்தில் ஜோகூர், சிங்கப்பூர் மற்றும் மலேசிய அரசாங்கத்திற்கு இடையிலான நல்லுறவுகள் நாம் இதுவரை கண்டிராத அளவில் உள்ளன," என்று அவர் தெரிவித்தார்.
பல்வேறு துறைகளில் குறிப்பாகப் பொருளாதாரத்தில் சிறந்த நற்பெயரைக் கொண்ட சிங்கப்பூர், ஜோகூரில் முதலீடு செய்ய விரும்பும் முதலீட்டாளர்களுக்குச் சிறந்த சேவையை வழங்குவதற்கான மாதிரியாகவும் பயன்படுத்தப்படுவதாக ஓன் ஹஃபிஸ் கூறினார்.
"மேற்கு ஆசியாவில் மோதல்கள் குறைய வேண்டும் என்று நாங்கள் பிரார்த்திக்கிறோம், ஆனால் இந்த வட்டாரம் ஒரு பாதுகாப்பான பகுதி என்பதைக் காட்ட இது ஒரு வாய்ப்பாகும். குறிப்பாகச் சிறப்புப் பொருளாதார மண்டலங்களின் அமைப்பு மூலம்," என்று அவர் விளக்கினார்.
தமது வேகமான, ஆக்ரோஷமான மற்றும் நடைமுறைப் பணிகளால், ஆரம்பத்தில் சில ஆட்சிக்குழு உறுப்பினர்கள் எரிச்சலுடனும் கோபத்துடனும் செயல்பட்டதாகவும், தற்போது அவர்கள் காலப்போக்கில் அதை ஏற்றுக்கொள்ளத் தொடங்கியதாகவும் ஓன் ஹஃபிஸ் தெரிவித்தார்.
இதனிடையே, "3T 1M" எனப்படும் உக்தியை தாம் பயன்படுத்திய வருவதாகக் கூறிய அவர், அதன் வழி தமது பணிகளைச் சிறப்பாக மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்தார்.
எதிர்காலத்திற்கான அவரது தொலைநோக்குப் பார்வை குறித்து வினவப்பட்ட போது, 2030-ஆம் ஆண்டுக்குள் ஜோகூரின் வளர்ச்சியை ஒரு முற்போக்கான, உள்ளடக்கிய மற்றும் நிலையான மாநிலமாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்ட 2030 மஜு ஜோகூர் திட்டம் செயல்படுத்தப்படும் என்று அவர் விளக்கினார்.
ஜோகூரை ஒரு வளர்ந்த மாநிலமாக மாற்றுவதற்கான இலக்கு உள்கட்டமைப்பு மற்றும் வானளாவிய கட்டிடங்கள் போன்ற வளர்ச்சியில் மட்டும் கவனம் செலுத்துவதில்லை.
மாறாகப் பணி கலாச்சாரத்திலும் சமூகம் சிந்திக்கும் விதத்திலும் ஒரு முன்னுதாரண மாற்றத்தையும் உள்ளடக்கியது என்று அவர் கூறினார்.
அண்மையில், ஜோகூர் மந்திரி புசாரின் அதிகாரப்பூர்வ இல்லமான சௌஜானாவில், பெர்னாமா தலைமை செய்தி ஆசிரியர் அருள் ராஜூ துரை ராஜ்-சின் தலைமையில் நடத்தப்பட்ட சிறப்பு நேர்காணலின்போது, ஓன் ஹஃபிஸ் அந்த கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)