ராவல்பிண்டி, பிப்ரவரி 28 (பெர்னாமா) -- பாகிஸ்தானுக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் இடையே நிலவி வரும் எல்லை தாண்டிய சண்டை தீவிரமடைந்து வருகிறது.
ஆப்கானிஸ்தானிலுள்ள 22 இராணுவ இலக்குகளை, பாகிஸ்தான் வான்வழி தாக்கியதாக, அந்நாட்டின் இராணுவ பேச்சாளர் தெரிவித்தார்.
தலிபானைச் சேர்ந்த 274 உறுப்பினர் கொல்லப்பட்ட நிலையில், இச்சண்டையில் பாகிஸ்தானின் 12 இராணுவ வீரர்களும் கொல்லப்பட்டதாக அவர் கூறினார்.
இருப்பினும், பாகிஸ்தானின் அக்கூற்றை தலிபான் மறுத்திருக்கிறது.
பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் இடையே பல மாதங்களாக நீடித்து வந்த எல்லை பிரச்சனை தற்போது நேரடி இராணுவ மோதலாக உருவெடுத்துள்ளது.
பிப்ரவரி 26-ஆம் தேதி இரவு தொடங்கிய இந்த மோதலில் இரு நாடுகளும் பெரும் இழப்புகளை சந்தித்துள்ளதாக கூறி வருகின்றன.
ஆப்கானிஸ்தான் எல்லைக்குள் சென்று பாகிஸ்தான் நடத்திய வான்வழித் தாக்குதலில் பெண்கள் மற்றும் குழந்தைகள் கொல்லப்பட்டதற்கு பதிலடியாக, தலிபான் படைகள் எல்லையெங்கும் ஒருங்கிணைந்த தாக்குதலை நடத்தின.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)