புத்ராஜெயா, 16 பிப்ரவரி (பெர்னமா) -- திவாலான நபர்கள் குறைந்தபட்சம் 36 வேலை நாள்களுக்குள் விடுவிக்கப்படுவதை உறுதிசெய்ய, 2026 Fast-Track எனும் இரண்டாம் வாய்ப்பு கொள்கை விடுப்புத் திட்டத்தை அரசாங்கம் அறிமுகப்படுத்தியிருக்கின்றது.
நேர்மையான வணிகம் அல்லது நிதி பரிவர்த்தனைகளில் தோல்வி அடைவது ஆயுள் தண்டனையாக இருக்கக்கூடாது, மாறாக, அவர்கள் மீண்டும் எழுவதற்கு, இரண்டாம் வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்று பிரதமர் துறை அமைச்சர்
டத்தோ ஶ்ரீ அசாலீனா ஓத்மான் சைட் கூறுகின்றார்.
சில நேரங்களில் திவால் நிலையானது மனிதாபிமானமற்றதாகக் கருதப்படுகிறது. இருப்பினும் சட்டம் என்பது சட்டமே. ‘இரண்டாவது வாய்ப்பு’ என்ற இந்தக் கருத்தின் மூலம், நேர்மையான தோல்வி ஆயுள் தண்டனை அல்ல. ஒருவரை திவாலாக்கும் சூழ்நிலைகள் அனைவரின் விருப்பத்தாலும் ஏற்படுவதில்லை என்பதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும். சிலர் தங்களால் இயன்றதை விட அதிகமாக செலவு செய்வதால் திவாலாகி விடுகிறார்கள் என்பதை நான் மறுக்கவில்லை என்றார் அவர்.
தனித்து வாழும் தாய்மார்கள் அல்லது தந்தைமார்கள், குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவன கடன் வாங்குபவர்கள், நிதி மோசடியால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் கைவிடப்பட்ட வீட்டு திட்டங்களில் வீடு வாங்கியவர்கள் என்று இத்திட்டம் நான்கு பிரிவினரை இலக்காகக் கொண்டுள்ளது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)