கோலாலம்பூர், டிசம்பர் 13 ( பெர்னாமா) -- அனைத்து வகை விரோதங்களையும் உடனடியாக நிறுத்துவதோடு, எவ்வித இராணுவ நடவடிக்கையையும் தொடர வேண்டாம் என்று தாய்லாந்திற்கும் கம்போடியாவிற்கும் பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் வலியுறுத்தினார்.
அந்நாடுகளின் நேரப்படி இன்றிரவு மணி 10 தொடங்கி, மேற்கொள்ளப்படவிருக்கும் அனைத்து இராணுவ நடவடிக்கைகளை நிறுத்துவதும் அதில் அடங்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
தாய்லாந்து பிரதமர் அனுதின் சார்ன்விராகுல் மற்றும் கம்போடிய பிரதமர் ஹுன் மனெட் ஆகியோருடன் தனித்தனியே மேற்கொள்ளப்பட்ட தொலைபேசி உரையாடல்கள் மூலம் இந்த அழைப்பு விடுக்கப்பட்டதாக பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் கூறினார்.
இரு நாடுகளின் எல்லைப் பகுதியில் நிலவும் பதற்றங்களைக் கருத்தில் கொண்டு, அமெரிக்க அதிபர் Donald Trump-உடன் தாம் நடத்திய கலந்துரையாடலைத் தொடர்ந்து அடுத்தக்கட்ட முன்னெடுப்பு அமைவதாக அவர் தெரிவித்தார்.
இப்பணிக்கு அமெரிக்க அரசாங்கத்தால் வழங்கப்படும் செயற்கைக்கோள் கண்காணிப்பும் துணைபுரியும் என்றும் பிரதமர் கூறினார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)