கோலாலம்பூர், 04 ஜூலை (பெர்னாமா) -- செவ்வாய்க்கிழமை அமலுக்கு வந்த மின்சார கட்டண மறு ஆய்வுக்குப் பிறகு எந்தவொரு கட்டண உயர்வாலும், பெரும்பாலான உயர்கல்வி மாணவர்கள் உட்பட இரண்டு கோடியே 30 லட்சம் பயனீட்டாளர்கள் பாதிக்கப்படமாட்டார்கள் என்று தெனாகா நெஷனல் நிறுவனம், தி.என்.பி உறுதியளித்துள்ளது.
பொதுவான குடியிருப்பில் வாடகைக்குத் தங்கியிருக்கும் மாணவர்கள் அல்லது கல்லூரி குடியிருப்பில் வசிக்கும் பெரும்பாலான மாணவர்களின் மின்சாரக் கட்டணங்கள், அவர்களின் பயன்பாட்டு முறைகளை அடிப்படையாகக் கொண்டு அதிகரிக்கப்படாது என்று தி.என்.பி தெரிவித்திருக்கிறது.
Time of Use-ToU எனும் உச்ச நேரங்களைத் தவிர்த்து மின்சாரத்தைப் பயன்படுத்தும் திட்டத்தை தி.என்.பிஊக்குவிக்கப்பதாக இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் அந்த நிறுவனம் தெரிவித்திருக்கிறது.
உதாரணத்திற்கு, சலவை இயந்திரங்கள், குளிரூட்டி அல்லது கணினிகள் போன்ற மின் சாதனங்களை உச்ச நேரங்களில் பயன்படுத்தாமல் இருப்பதால், குறைந்த கட்டண விகிதங்களை அனுபவிக்கலாம் என்று
தி.என்.பி ஆலோசனை வழங்கியுள்ளது.
பொது மற்றும் தனியார் உயர்கல்வி நிறுவனங்கள் மற்றும் பிற கல்வி நிறுவனங்களுக்கும் மின்சார கட்டணங்களில் 10 விழுக்காடு தள்ளுபடி வழங்கப்படும் என்று அந்நிறுவனம் கூறியிருக்கிறது.
சமூக நல இல்லங்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்களுக்கும் அதே தள்ளுபடி வழங்கப்படும் என்றும் தி.என்.பி அறிவித்துள்ளது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)