ஹொக்கைடோ, 25 ஜூன் (பெர்னாமா) -- ஜப்பான் ராணுவம் முதல் முறையாக அந்நாட்டின் பகுதிக்குள் ஏவுகணை சோதனையை மேற்கொண்டது.
தனது இராணுவக் கட்டமைப்பை மேம்படுத்தும் நோக்கில் இச்சோதனை நடத்தப்பட்டதாக ஜப்பான் தெரிவித்திருக்கிறது.
வடகொரியா மற்றும் சீனாவின் அச்சுறுத்தல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் ஜப்பான் தனது ராணுவக் கட்டமைப்பை துரிதப்படுத்தி வருகிறது.
நேற்று ஜப்பானின் வட திசையில் உள்ள ஹொக்கைடோ தீவில் ஏவுகணை சோதனை நடத்தப்பட்டது.
தீவின் தென் கடற்கரையிலிருந்து சுமார் 40 கிலோமீட்டர் தொலைவில் பணியாளர்கள் இல்லாத படகை குறிவைத்து ஜப்பானின் தரை தற்காப்புப் படை ஏவுகணையை ஏவியது.
இட வரம்புகள் மற்றும் பாதுகாப்பு காரணமாக கடந்த காலங்களில் அமெரிக்காவிலும் ஆஸ்திரேலியாவிலும் ஜப்பான் ஏவுகணை சோதனைகளை மேற்கொண்டு வந்தது.
நேற்று நடத்தப்பட்ட ஏவுகணை சோதனை வெற்றியடைந்திருப்பதாகவும் வரும் ஞாயிற்றுக்கிழமை மற்றோர் ஏவுகணை சோதனை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாகவும் ஜப்பானின் தற்காப்பு அமைச்சு கூறியது.
--பெர்னாமா
[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]