அம்பாங், 21 மார்ச் (பெர்னாமா) -- அம்பாங்கில் நேற்று முதியவர் ஒருவரை மிரட்டி அவருக்கு காயம் ஏற்படுத்தியச் சம்பவத்தில் தொடர்புடையதாக நம்பப்படும் ஆடவர் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.
ஜாலான் கோலாம் ஆயிர் லாமா சமிக்ஞை விளக்கு பகுதியில் 67 வயதுடைய ஒரு மருத்துவரான அம்முதியவர் செலுத்திய காரின் பின்புறத்தில் வெள்ளை நிற மெர்செடிஸ் ரகக் காரைச் செலுத்திய அச்சந்தேக நபர் மோதியதாக அம்பாங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் ஏ.சி.பி முஹமட் ஃபாரோக் எஷாக் தெரிவித்தார்.
நேற்று அம்பாங் ஜெயா மாவாட்ட போலீஸ் தலைமையகத்திற்கு விளக்கமளிக்க வந்த 27 வயதுடைய அச்சந்தேக நபர் இரவு 9.45 மணிக்கு கைது செய்யப்பட்டதாக இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் முஹமட் ஃபாரோக் குறிப்பிட்டார்.
குற்றவியல் சட்டம் செக்ஷன் 323/506-இன் கீழ் விசாரணைக்கு உதவும் பொருட்டு தடுப்பு காவல் உத்தரவுக்கான விண்ணப்பம் இன்று செய்யப்படும் என்று அவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அவ்வாடவர் இதற்கு முன்னர் எவ்வித குற்றப்பதிவையும் கொண்டிருக்கவில்லை என்றும் அவரின் சிறுநீர் பரிசோதனை போதைப் பொருளுக்கான எதிர்மறை முடிவையே காட்டியதாகவும் முஹமட் ஃபாரோக் மேலும் விவரித்தார்.
பெட்ரோல் நிலையம் சென்றடைந்த பாதிக்கப்பட்டவரை அச்சந்தேக நபர் தமது காரை கொண்டு முன்புறத்திலிருந்து தடுத்து, பின்னர் அக்காலிருந்து வெளியேறி மருத்துவரின் கார் கதவை திறந்ததாக முஹமட் ஃபாரோக் தெரிவித்தார்.
அந்த ஆடவர் பின்னர் அம்மருத்துவரின் கன்னத்தில் குத்தி, அவரின் முடியை இழுத்து, இடுப்பில் உதைத்துள்ளார்.
அங்குள்ள பொதுமக்களால் பதிவுச் செய்யப்பட்ட இச்சம்பவத்தின் காணொளி நேற்று சமூக வலைத்தளங்களில் பரவாலகப் பகிரப்பட்டது.
-- பெர்னாமா
[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]
© 2024 BERNAMA • உரிமைத் துறப்பு • தனியுரிமைக் கொள்கை • பாதுகாப்பு கொள்கை