சிறப்புச் செய்தி

இரு கைகளால் 45 வார்த்தைகளை எழுதி மாணவி உலக சாதனை

17/09/2020 08:19 PM

கர்நாடகா, 17 செப்டம்பர் (பெர்னாமா) -- கர்நாடக மாநிலமான மங்களூரைச் சேர்ந்த 17 வயது மாணவி ஆதிஸ்ரூபா, ஒரு நிமிடத்தில் இரு கைகளால் 45 வார்த்தைகளை எழுதி உலக சாதனை படைத்துள்ளார்.  

ஒரு நிமிடத்தில் இரு கைகளால் 25 வார்த்தைகள் எழுதி இருந்த முந்தைய உலக சாதனையை முறியடித்து, தற்போது ஆதிஸ்ரூபா புதிய உலக சாதனையைப் படைத்திருக்கின்றார்.  

ஆதிஸ்ரூபா தாயார், மங்களூருவில் ஒரு கல்வி பயிற்சி மையத்தை நடத்தி வருகிறார். 

அந்த பயிற்சி மையத்தில் அதிகமான மாணவர்கள் படித்து வருகின்ற நிலையில், அங்குள்ள மாணவர்களுக்கு தனித்திறனை வளர்த்து கொள்வதற்காக பல்வேறு பயிற்சிகளும் அளிக்கப்பட்டு வருகின்றன. 

இதில் ஆதிஸ்ரூபாவுக்கும் இரு கைகளையும் பயன்படுத்தி எழுதும் பயிற்சி அம்மையத்தில்அளிக்கப்பட்டது. 

அவரும் அந்த பயிற்சியை ஆர்வத்துடன் கற்றுக்கொண்டு, தற்போது இரண்டு கைகளை ஒரே நேரத்தில் பயன்படுத்தி எழுதியும் வருகிறார். 

இதனிடையே, உத்தர பிரதேசத்தை சேர்ந்த ஒரு கல்வி நிறுவனம் மங்களூருவுக்கு வந்து, ஆதிஸ்ரூபாவுக்கு 2 கைகளை பயன்படுத்தி எழுதும் தேர்வை நடத்தியது. 

இதில் கலந்து கொண்ட ஆதிஸ்ரூபா ஒரு நிமிடத்தில் இரு கைகளை பயன்படுத்தி 45 வார்த்தைகளை எழுதி சாதனைப் படைத்தார். 

--பெர்னாமா