சைபர்ஜெயா, ஏப்ரல் 28 (பெர்னாமா) -- தனது அமலாக்கப் பிரிவை ஒரு முழுமையான துறையாகத் தரம் உயர்த்தும் முன்மொழிவை விரிவுபடுத்த உள்நாட்டு வாணிபம் மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சு கே.பி.டி.என், பொது சேவை துறை ஜே.பி.ஏ-வுடன் இணைந்து, ஆய்வை மேற்கொண்டு வருகிறது.
அமைச்சரவை அளவில் விவாதிக்கப்பட்ட இவ்விவகாரம், தற்போதைய அமலாக்கச் சவால்களுக்கு ஏற்ப, பிரிவின் திறனையும் ஆற்றலையும் வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தை ஏற்றுக் கொண்டுள்ளதாக கே.பி.டி.என் அமைச்சர் டத்தோ அர்மிசான் முஹமட் அலி தெரிவித்தார்.
"நாங்கள் முடிந்தவரை விரைவாகவும் கடினமாகவும் உழைப்போம். ஏனெனில், சற்று முன்பு துணைப் பிரதமர் குறிப்பிட்டது போலவும், உண்மையில் இது சில காலமாகவே விவாதத்தில் இருந்து வருவது மறுப்பதற்கில்லை. உதாரணமாக மின்வணிகத்தில் புகார்கள் அதிகரித்து வருகின்றன. எனவே, இதுவும் பிற்காலத்தில் கே.பி.டி.என்-இல் உள்ள அமலாக்கப் பிரிவின் மையமாகவே மாறவிருக்கும் முக்கியமான கூறுகளில் ஒன்றாகும்," என்றார் அவர்.
மனிதவள மேம்பாடு தொடர்பான அரசாங்கத்தின் தற்போதைய கொள்கைகளைக் கருத்தில் கொண்டு, இவ்விவரங்கள் செயல்படுத்தப்பட வேண்டும் என்றும் அவர் நினைவுறுத்தினார்.
அதுமட்டுமின்றி, அப்பிரிவைத் துறையாகத் தரம் உயர்த்த வேண்டியதன் அவசியத்தை முழுமையாக ஆதரித்த துணைப் பிரதமர் டத்தோ ஶ்ரீ டாக்டர் அஹ்மட் சாஹிட் ஹமிடியின் அங்கீகாரத்தையும் டத்தோ அர்மிசான் வெகுவாகப் பாராட்டினார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)