Ad Banner
 பொது

எரிசக்தி நெருக்கடியைத் தொடர்ந்து தொழிலாளர் உதவித் திட்டத்தை மனிதவள அமைச்சு தொடங்கும்

26/04/2026 04:33 PM

கோலாலம்பூர், ஏப்ரல் 26 (பெர்னாமா) -- உலக எரிசக்தி நெருக்கடியால், தொழிலாளர் சந்தைகளில் ஏற்படும் பிரச்சனைகளுக்குத் தீர்வுக் காண்பதற்கு, மனிதவள அமைச்சு உதவித் திட்டத்தை அறிமுகப்படுத்தவுள்ளது.

மே முதலாம் தேதி அனுசரிக்கப்படும் தொழிலாளர் தினத்தை முன்னிட்டு இத்திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்று அதன் அமைச்சர் டத்தோ ஶ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன்  தெரிவித்தார்.

கடந்த மாதம் ஐந்தாயிரத்து 900 மலேசியர்கள் வேலை இழந்ததைத் தொடர்ந்து, இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ரமணன் ராமகிருஷ்ணன் கூறினார்.

தற்போதைய புவிசார் அரசியல் காரணமான ஏற்படும் உலகளாவிய பொருளாதார தாக்கத்தை கையாள, 2017ஆம் ஆண்டு வேலை காப்பீட்டு செயல்முறை சட்டத்தை மேம்படுத்துவது உட்பட வேலை வாய்ப்பை அதிகரிப்பதை இத்திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.

"சரியான துறையில் சிறந்த ஊதியத்துடனான வேலைக்கு விண்ணப்பிப்பதை எளிதாக்கும் விதமாக, வேலையை ஒருங்கிணைப்பதற்கும் இதர நடவடிக்கைக்கும் செயற்கை நுண்ணறிவான ஏ.ஐ பயன்படுத்தும் முழுமையான மையத்தை MyFutures-க்கு நாங்கள் அறிமுகப்படுத்தினோம்," என்றார் அவர்.

இன்று கோலாலம்பூரில் நடைபெற்ற 2026ஆம் ஆண்டுக்கான MYFutureJobs கண்காட்சியில் கலந்து கொண்டப் பின்னர் அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: மாலை 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)