சிரம்பான், ஏப்ரல் 26 (பெர்னாமா) -- அரசு சாரா அமைப்பு, என்.ஜி.ஓ ஒன்றின் ஒரு கோடியே 23 லட்சம் ரிங்கிட் நிதியை மோசடி செய்ததாகச் சந்தேகிக்கப்படும் மத போதகர் ஒருவரின் தடுப்புக் காவலை நீட்டிப்பதற்கான அனுமதியை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம், எஸ்.பி.ஆர்.எம் பெற்றுள்ளது.
சுமார் 30 வயதுடைய அச்சந்தேக நபருக்கான தடுப்புக் காவலை நீட்டிக்க, மஜிஸ்திரேட் நூருல் ஷக்கினா ரொஸ்லி சிரம்பான் மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று அனுமதி வழங்கினார்.
அவரின் தடுப்புக் காவல் இன்றோடு நிறைவடைந்ததை அடுத்து, அதன் நீட்டிப்பு அனுமதிக்கான விண்ணப்பம் செய்யப்பட்டது.
நெகிரி செம்பிலான் மாநிலத்திற்கான எஸ்.பி.ஆர்.எம் இயக்குநர் அவ்கோக் அஹ்மட் தஃவ்பிக் புத்ரா அவ்க் இஸ்மாயில் இத்தகவலை உறுதிபடுத்தினார்.
முன்னதாக, சந்தேக நபர் கடந்த புதன்கிழமை தொடங்கி ஐந்து நாள்களுக்கு தடுத்து வைக்கப்பட்டார்.
நான்கு தனிநபர் கணக்குகள், மூன்று தன்னார்வ தொண்டு நிறுவனக் கணக்குகள் மற்றும் எட்டு நிறுவனக் கணக்குகள் உட்பட, சுமார் ஒரு கோடியே 16 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள 15 வங்கிக் கணக்குகளை எஸ்.பி.ஆர்.எம் இதுவரை முடக்கியுள்ளது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: மாலை 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)