Ad Banner
Ad Banner
Ad Banner
 பொது

சுற்றுலா மேம்பாட்டில் உள்ளூர் மக்களுக்கு ஜோகூர் முன்னுரிமை

12/03/2026 06:41 PM

ஜோகூர் பாரு, 12 மார்ச் (பெர்னாமா) -- மாநில சுற்றுலாத் துறையை வலுப்படுத்தும் ஒரு முயற்சிகளின் ஒரு பகுதியாக, சுற்றுலாத் துறையின் வளர்ச்சியில் உள்ளூர் மக்களுக்கு ஜோகூர் மாநில அரசாங்கம் முன்னுரிமை அளிக்கிறது.

ஜோகூரில் உள்ள மிருகக்காட்சிசாலையில் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கு 30 ரிங்கிட் விதிக்கப்படுவதுடன் ஒப்பிடும் போது, உள்ளூர் மக்களுக்கு 10 ரிங்கிட் வசூலிப்பதன் மூலம், இந்த அணுகுமுறையைக் காண முடியும் என்று ஜோகூர் மந்திரி புசார்  டத்தோ ஓன் ஹஃபிஸ் காஸி கூறினார்.

மேலும், தாமான் மெர்டேகா, ஜோகூர் அரச தாவரவியல் பூங்கா மற்றும் நகர வனப்பகுதி உள்ளிட்ட நகரத்தின் பல முக்கிய ஓய்வு இடங்களின் வசதிகளை மேம்படுத்தும் பணிகளும் இந்த முயற்சிகளுக்குத் துணை புரிந்ததாக அவர் குறிப்பிட்டார்.

மாநில அரசு வழங்கும் சுற்றுலா வசதிகளை, முதலில் உள்ளூர் மக்கள் அனுபவிக்க உறுதி செய்வதை இது நோக்கமாகக் கொண்டுள்ளதாகவும்  ஓன் ஹஃபிஸ் தெரிவித்தார்.

''ஜோகூர் மக்களுக்கு ஓய்வு, பொழுதுபோக்கு ஆகியவற்றில் முன்னுரிமை அளிக்கப்படுகிறது என்பதையும், இந்த ஆண்டு இன்னும் பல சேவை அறிமுகப்படுத்தப்படும் என்பதையும் நான் வலியுறுத்த விரும்புகிறேன்," என்று அவர் பெர்னாமாவிடம் விவரித்தார்.

வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளை, குறிப்பாக சிங்கப்பூரைச் சேர்ந்த மக்களை அம்மாநிலத்தின் சுற்றுலாத் துறை சார்ந்துள்ளதாக எழுந்துள்ள கருத்து குறித்து ஓன் ஹஃபிஸ் பதிலளித்தார்.

வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் முக்கியத்துவத்தை மாநில அரசு மறுக்கவில்லை என்றாலும் ஜோகூரின் சுற்றுலாவை விளம்பரப்படுத்த மறைமுகமாக உதவிய உள்நாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதன் மூலம் சமநிலையை உறுதி செய்ய விரும்புவதாக அவர் விளக்கினார்.

மாநிலத்தில் உள்ள அனைத்து மாவட்டங்கள் முழுவதும் பல சுற்றுலாத் தளங்கள் மேம்படுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறினார்,.

அவற்றில் சுற்றுலாத் தலங்களாக மாறும் திறனைக் கொண்டிருக்கும் தங்காக்கில் உள்ள குனொங் லெடாங் நீர்வீழ்ச்சிப் பகுதி மற்றும் இஸ்கண்டார் புத்ரியில் உள்ள கம்போங் சுங்கை மெலாயு ஆகியவை அடங்கும்.

உள்நாட்டு மற்றும் அனைத்துலக சுற்றுலாப் பயணிகளுக்கான ஆதரவை வலுப்படுத்துவதில் கவனம் செலுத்தும் 2026-ஆம் ஆண்டு ஜோகூருக்கு வருகை புரியும் திட்டத்திற்கு ஏற்ப இந்த முயற்சிகள் அமைந்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

2026-ஆம் ஆண்டு ஜோகூருக்கு வருகை புரியும் ஆண்டை முன்னிட்டு, இவ்வாண்டு முழுவதும் ஒரு கோடியே 20 லட்சம்  சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் இலக்கை அடிப்படையாகக் கொண்டு, மாநில அரசு நேரடியாகவும் மறைமுகமாகவும் 4200 கோடி ரிங்கிட்டை ஈட்ட முடியும் என்று மாநில அரசு கணித்துள்ளது.

அண்மையில், ஜோகூர் மந்திரி புசாரின் அதிகாரப்பூர்வ இல்லமான சௌஜானாவில், பெர்னாமா தலைமை செய்தி ஆசிரியர் அருள் ராஜூ துரை ராஜ்-சின் தலைமையில் நடத்தப்பட்ட சிறப்பு நேர்காணலின்போது, ஓன் ஹஃபிஸ் அந்த கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார்.

--  பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)