கோலாலம்பூர், 08 மார்ச் (பெர்னாமா) -- மத்திய கிழக்கில் பதற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், இன்னும் 649 மலேசியர்கள் அங்குள்ள பல பகுதிகளில் சிக்கி இருக்கின்றனர்.
இன்னும் தயார்நிலையில் இருக்கும் வணிக விமானங்களின் மூலம் அவர்களை நாட்டிற்கு திரும்ப அழைத்து வருவதற்கான முயற்சிகளில் தற்போது கவனம் செலுத்தப்பட்டு வருவதாக, வெளியுறவு அமைச்சு கூறியுள்ளது.
நேற்று மாலை 6 மணி வரை சுமார் 24 ஆயிரத்து 568 மலேசியர்கள் விஸ்மா புத்ராவின் e-Konsular எனப்படும் மின்னியல் தூதரகத்தின் அமைப்பில் பதிவு செய்திருப்பதாக, இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் வெளியுறவு அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட மலேசியர்களுக்கான இடமாற்ற நடவடிக்கைகளையும் தூதரக உதவிகளையும் ஒருங்கிணைப்பதில்
சம்பந்தப்பட்ட வட்டாரத்தில் உள்ள மலேசிய தூதரகம் தற்போது கவனம் செலுத்துவதாக, அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனிடையே, அவ்வட்டாரத்தில் பாதுகாப்பு நிலைமை மோசமடைந்தால், அங்குள்ள மலேசியர்களை மீண்டும் நாட்டிற்கு அழைத்து வருவதற்கான திட்டத்திற்கும் அரசாங்கம் ஒப்புதல் அளித்துள்ளது.
ஐக்கிய அரபு சிற்றரசு, சவூதி அரேபியா, ஓமன் மற்றும் துருக்கி ஆகிய நாடுகளில் உள்ள பயண வழிகள் மற்றும் வணிக விமானங்களின் மூலம் அவர்களை நாட்டிற்கு அழைத்து வருவதற்கான முயற்சிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாக, அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)