புத்ராஜெயா, 06 மார்ச் (பெர்னாமா) -- மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம், எஸ்.பி.ஆர்.எம், அரசாங்கத்தின் ஓர் அரசியல் கருவி என்று 'பெர்சி' (BERSIH) எனப்படும் தூய்மையான மற்றும் நியாயமான தேர்தல் தொடர்பான அரசு சார்பற்ற இயக்கங்கள் முன்வைத்திருக்கும் குற்றச்சாட்டு, நியாயமற்றது மட்டுமின்றி, தொடர்புடைய அறிக்கைகளை முன்னதாக ஆராயாமல் செய்யப்பட்டது என்றும் பிரதமர் சாடியிருக்கின்றார்.
எந்தவொரு நபரையும் தாம் தற்காக்கவில்லை என்று கூறிய டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம், அரசாங்கம் ஒரு பொருத்தமான செயற்குழுவை அமைத்துள்ளதோடு அவ்விவகாரம் தேசிய சட்டத்துறை தலைவர் உட்பட அமலாக்கத் தரப்பினரின் பரிசீலனையில் உள்ளதாக தெரிவித்தார்.
''அறிக்கைக்காக காத்திருக்கிறேன். இது இன்னும் கிடைக்கவில்லை. அரசியல் விருப்பங்களைப் பின்பற்றுவதாக எங்கள் மீது குற்றம் சுமத்தப்படுகிறது. இந்த ரமலான் மாதத்தில், மக்களைத் தாக்க வேண்டாம். முதலில் தகவல்களைப் பெற்று பின்னர் ஒரு முடிவை எடுங்கள். நான் யாரையும் தற்காக்கவில்லை. இது இப்போது ஒரு பிரபலமான அறிக்கையாகக் கருதப்படுகிறது. இவ்வளவு காலமாக கோடிக் கணக்கில் திருடப்பட்டபோது, நீங்கள் ஏன் குரல் கொடுக்கவில்லை?'', என்று அவர் கேள்வி எழுப்பினார்.
எஸ்.பி.ஆர்.எம், அரசியல் அச்சுறுத்தலுக்கான கருவியாக பயன்படுத்தப்படுவதோடு, ஊழலை ஒழிக்கும் அதன் கடமையிலிருந்து தற்போது விலகியுள்ளதாக 'பெர்சி' வெளியிட்ட கூற்று தொடர்பில் கருத்துரைத்த அன்வார் அவ்வாறு கூறினார்.
--பெர்னாமா
[பெர்னாமா செய்திகள் நேரலை: மாலை 6 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]