புத்ராஜெயா, 27 பிப்ரவரி (பெர்னாமா) -- ஈரானில் தற்போதைய சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, அங்குள்ள மலேசியர்களின் நலனை வெளியுறவு அமைச்சு தொடர்ந்து கண்காணித்து வருகிறது.
மலேசியர்களின் பாதுகாப்பு மற்றும் தூதரக சேவைகள் போன்றவற்றில் தொடர்ந்து கவனம் செலுத்தப்பட்டு வருவதாக விஸ்மா புத்ரா இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
சொந்த விருப்பத்தின் அடிப்படையில் ஈரானில் தங்கும் மலேசியர்களுக்கு தூதரக சேவைகள் மற்றும் உதவிகள் தொடர்ந்து வழங்கப்பட வேண்டும் என்று விஸ்மா புத்ரா அந்த அறிக்கையில் கூறியது.
ஈரானில் தற்போது மலேசியர்களைத் தொடர்புகொள்வதில் ஊடகங்கள் காட்டும் ஆர்வம் குறித்து கருத்து தெரிவித்த விஸ்மா புத்ரா, அவர்களின் தனியுரிமையும் தனிப்பட்ட முடிவுகளையும் தங்கள் தரப்பு மதிப்பதாக விவரித்தது.
மேலும், தனிநபர் தரவு பாதுகாப்பு கொள்கைகளை முழுமையாகப் பின்பற்றி, சம்பந்தப்பட்டவர்களின் தனிப்பட்ட தகவல்கள், தொடர்பு விவரங்கள் அல்லது ஊடகங்களுடன் அவர்களை இணைக்கும் எந்தவொரு சந்திப்பையும் ஏற்பாடு செய்ய இயலாது என்றும் விளக்கியது
பிப்ரவரி 5 ஆம் தேதி வெளியிடப்பட்ட முந்தைய ஆலோசனை படி, ஈரானுக்கான அத்தியாவசியமற்ற அனைத்து பயணங்களையும் தற்போதைக்கு ஒத்திவைக்குமாறு விஸ்மா புத்ரா மலேசியர்களுக்கு அறிவுறுத்தியது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)