புத்ராஜெயா, 24 பிப்ரவரி (பெர்னாமா) -- இவ்வாண்டு மார்ச் மாத இறுதியில், சட்டம் 872 அல்லது 2025-ஆம் ஆண்டு கீக் தொழிலாளர் சட்டம் அமல்படுத்தப்படவிருக்கும் நிலையில், நாட்டின் கீக் தொழில்துறையின் முதன்மை பங்குதாரர்கள் உடனான கலந்தாலோசிப்புகளை மனிதவள அமைச்சுச் KESUMA தொடர்ந்து தீவிரப்படுத்தி வருகின்றது.
ஒரு புதிய சட்டத்தை உருவாக்கும் செயல்முறைக்குக் கவனமான பரிசீலிப்பு, சமநிலை மற்றும் ஆழமான விவாதம் தேவை.
அதன்வழி, தொழில்துறையின் நிலைத்தன்மைக்கு ஆபத்து ஏற்படாமல் தொழிலாளர்களின் நலனைப் பாதுகாக்க முடியும் என்று
மனிதவள அமைச்சர் டத்தோ ஶ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் கூறினார்.
நேற்று, நாட்டின் கீக் தொழில்துறையின் பல முதன்மை பங்குதாரர்களுடன் நடத்தப்பட்ட கலந்தாலோசிப்பு அமர்வு, ஒவ்வொரு பிரதிநிதியும் தங்களின் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும், கேள்விகளை எழுப்பவும், மேம்பாடுகளுக்கான பரிந்துரைகளை முன்வைக்கவும் வாய்ப்பளித்ததாக, டத்தோ ஶ்ரீ ரமணன் கூறினார்.
சமூகப் பாதுகாப்பு, பாதுகாப்பு பங்களிப்புகள், பிரச்சனைகளைத் தீர்க்கும் வழிமுறைகள் மற்றும் நியாயமான வருமான அமைப்பு ஆகிய பிரச்சனைகள் குறித்தும் அதில் கலந்துரையாடப்பட்டதாக, தமது அதிகாரப்பூர்வ முகநூல் பதிவில் அவர் குறிப்பிட்டிருந்தார்.
மேலும், கலந்துரையாடப்பட்ட பொறுப்புகளின் சமநிலையை உறுதிச் செய்வதற்காக தள வழங்குநர்களின் பங்கும் விவாதிக்கப்படுவதோடு, அந்த சிக்கல்கள் ஒவ்வொன்றும் பிற பங்குதாரர்கள் உடனான கலந்துரையாடல் அமர்வுக்குக் கொண்டு செல்லப்படும் என்றும் ரமணன் தெரிவித்தார்.
இதனிடையே, 12 லட்சத்திற்கும் அதிகமான கீக் தொழிலாளர்களைப் பாதுகாக்கும் நோக்கில், கடந்தாண்டு செப்டம்பர் 9-ஆம் தேதி, 2025-ஆம் ஆண்டு கீக் தொழிலாளர் சட்ட மசோதா மேலவையில் நிறைவேற்றப்பட்டு, டிசம்பர் 31-ஆம் தேதி அரசாங்க பதிவேட்டில் வெளியிடப்பட்டது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)