புத்ராஜெயா, 09 பிப்ரவரி (பெர்னாமா) -- எந்தவொரு விதிமுறைகளையும் பின்பற்றாமல் வழிபாட்டுத் தலங்கள் கட்டப்படுவதை அரசாங்கம் அனுமதிக்காது.
மலேசியா அரசியலமைப்பின் அடிப்படையில் இயங்கும் நாடாக இருப்பதால், எந்த வழிபாட்டுத் தலத்தின் கட்டுமானமும் சட்டத்தின் கட்டுப்பாட்டிற்குள் உட்பட்டு இருக்க வேண்டும் எனவும் டத்தோ ஶ்ரீ அன்வார் கூறினார்.
"அனைத்து வழிபாட்டுத் தலங்களும் அனுமதிக்கப்படுகின்றன என்று அன்வார் கூறினார். சட்ட விதிகளைப் பின்பற்றினால் அனைத்தும் அனுமதிக்கப்படும். அவர்கள் மற்றவர்களின் நிலத்தைப் பயன்படுத்துகிறார்கள் என்றால், நாம் எப்படி அந்த வழிபாட்டுத் தலத்திற்கு அனுமதிக்க முடியும்? நாம் மற்றவர்களின் நிலத்தைக் கைப்பற்றுகிறோம். எனவே, சட்டவிரோத நிலம் வலுக்கட்டாயமாக பறிமுதல் செய்யப்படுகிறது அல்லது அனுமதியின்றி எடுக்கப்படுவது எப்படி? அது முடியாது", என்றார் அவர்.
இன்று புத்ராஜெயாவில் நடைபெற்ற தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சின் மாதாந்திரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் அவர் அவ்வாறு கூறினார்.
இவ்விவகாரத்தை சர்ச்சையின் மூலமாகவோ அல்லது சினமூட்டும் நடவடிக்கையின் மூலமாகவோ தீர்க்க முடியாது.
மாறாக, நடைமுறையில் உள்ள சட்டங்களின் அடிப்படையிலே இதற்கு தீர்வு காண முடியும் என்று பிரதமர் ஆலோசனைக் கூறினார்.
மேலும் பேசிய அவர், நாட்டின் மத விவகாரங்களைத் தூண்டி இன ஒற்றுமையைச் சீர்குலைக்க வேண்டாம் என்று சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு அவர் நினைவூட்டினார்.
இத்தகையை விவகாரங்கள் நேர்த்தியாகவும், விதிமுறைகளின் அடிப்படையிலும் நிர்வகிக்கப்பட வேண்டும் என்று அன்வார் கேட்டுக் கொண்டார்.
இதனிடையே, சட்டத்தை மீறும் எந்தவொரு தரப்பினருக்கும் எதிராக, குறிப்பாக 3R எனப்படும் இனம், மதம் மற்றும் அரசக் குடும்பம் தொடர்பிலான விவகாரங்கள் தொடர்பான விதுமுறையை மீறுவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அன்வார் கூறினார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)