Ad Banner
 பொது

99 லட்சம் ரிங்கிட் மதிப்புடைய சிகரெட்டுகளை கடத்தும் முயற்சி முறியடிப்பு

06/02/2026 04:44 PM

பட்டர்வொர்த், 06 பிப்ரவரி (பெர்னாமா) --  கடந்தாண்டு டிசம்பர் 24-ஆம் தேதி, சிலாங்கூர், கிள்ளான் துறைமுகத்தில் உள்ள கொள்கலன் ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் 99 லட்சம் ரிங்கிட் மதிப்புடைய சிகரெட்டுகளை கடத்தும் முயற்சியை அரச மலேசிய சுங்கத்துறை, ஜே.கே.டி.எம் முறியடித்துள்ளது.

காலை மணி 10.40 அளவில் வியட்நாமில் இருந்து வந்த அக்கொள்கலனைத் தடுத்த அமலாக்கப் பிரிவு குழுவினர், அதில் தளவாடங்கள் என்று எழுத்தப்பட்டிருந்த 930 பெட்டிகளை கண்டெடுத்ததாக பினாங்கு மாநில சுங்கத்துறை இயக்குநர் டத்தோ ரோஹாய்சாட் அலி தெரிவித்தார்.

''அதில் 908 பெட்டிகளில் 90 லட்சத்து 80 ஆயிரம் வெள்ளை சிகரெட்டுகள் இருப்பது கண்டறியப்பட்டது. அவை சுங்க வரி உட்பட 99 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள தடைசெய்யப்பட்ட பொருட்கள் என்று சந்தேகிக்கப்படுகிறது. அதைத் தவிர்த்து மீதமுள்ள 22 பெட்டிகளில் தளவாடங்கள் இருந்தன'', என்றார் அவர்.

இன்று மாநில தடுப்பு வளாகத்தில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் டத்தோ ரோஹாய்சாட் அலி அத்தகவல்களைக் கூறினார்.

உள்ளூர் சந்தைக்கு விற்கப்படும் சிகரெட்டுகளைக் கடத்தும் நோக்கத்தில் தளவாடங்கள் என்று எழுதப்பட்டிருக்கும் பெட்டிகளில் பதுக்குவதை அக்கும்பல் செய்து வந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

இதனிடையே, 2023-ஆம் ஆண்டு சுங்க இறக்குமதி மீதான தடை ஆணை பகுதி II, அட்டவணை III இன் கீழ் உள்ள தேவைகளுக்கு இணங்க சிகரெட்டுகளை இறக்குமதி செய்யவதற்கு அனுமதி அளிக்கப்படுவதாக ரோஹாய்சாட் விவரித்தார்.

1967-ஆம் ஆண்டு சுங்க சட்டம் செக்‌ஷன் 135(1) (a)- இன் கீழ் இவ்விவகாரத்தில் சம்பந்தப்பட்ட நபர்களை அடையாளம் காண்பது உட்பட மேலும் விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)