மேகாலயா, பிப்ரவரி 06 (பெர்னாமா) -- இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான மேகாலயாவில் உள்ள ஒரு சட்டவிரோத நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட வெடிப்புச் சம்பவத்தில் குறைந்தது 18 பேர் உயிரிழந்தனர்.
மேலும், இடிபாடுகளில் பலர் சிக்கியிருக்கலாம் என்றும் அஞ்சப்படுகிறது.
கிழக்கு ஜெயின்டியா மலை மாவட்டத்தில் உள்ள சிறிய துளை சுரங்கத்தில் காலை மணி 11 அளவில் அவ்வெடிப்புச் சம்பவம் நிகழ்ந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து சென்று, மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டாலும், தேவையான உபகரணங்கள் இல்லாததால் மீட்பு நடவடிக்கைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன.
ஒரு காலத்தில், வடகிழக்கு மாநிலங்களில் பரவலாக பயன்படுத்தப்பட்ட இந்த சிறிய துளை சுரங்கங்கள், உயிரிழப்புகள் மற்றும் சுற்றுச்சூழல் சேதம் காரணமாக 2014-இல் தடை செய்யப்பட்டன.
மத்திய அரசின் கணிப்பின்படி, 2012-ஆம் ஆண்டு முதல் அசாம் மற்றும் மேகாலயாவில் அவ்வகை சட்டவிரோத சுரங்கங்களில் 63 பேர் உயிரிழந்துள்ளனர்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)