அமெரிக்கா, ஜனவரி 30 (பெர்னாமா) -- அணு ஆயுதங்கள் தொடர்பான ஓர் உடன்பாட்டை எட்டுவதற்கு ஈரான் உடனடியாக பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் நெருக்குதல் அளித்துள்ளார்.
ஈரான் அவ்வாறு செய்யத் தவறினால்,பேரழிவு தரும் தாக்குதலை வாஷிங்டன் தொடுக்கும் என்று அவர் எச்சரித்தார்.
அணு ஆயுதங்கள் இல்லாமல், அனைத்து தரப்பினருக்கும் பயனளிக்கும் ஒரு நியாயமான மற்றும் சமமான உடன்பாட்டை எட்ட ஈரான் உடனடியாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று டோனல்ட் டிரம்ப் தெரிவித்தார்.
"நான் அவர்களுக்கு இரண்டு விவகாரம் கூறினேன். ஒன்று, அணு உலை வேண்டாம். இரண்டு, போராட்டக்காரர்களைக் கொல்வதை நிறுத்த வேண்டும். ஆயிரக்கணக்கில் கொலை செய்யப்படுகிறார்கள். உங்களுக்குத் தெரியும், இரு வாரங்களுக்கு முன்பு, நான் 837 தூக்கு தண்டனைகளை நிறுத்தினேன்,'' என டோனல்ட் டிரம்ப் கூறினார்.
இதனிடையே, இராணுவ நடவடிக்கையின் வழி வாஷிங்டன் தொடர்ந்து அச்சுறுத்தி வரும் பட்சத்தில், அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான எந்தவொரு சாத்தியத்தையும் ஈரான் நிராகரித்திருக்கிறது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)