Ad Banner
 பொது

மலேசியா-சிங்கப்பூர் ஆர்.தி.எஸ் திட்டம் இவ்வாண்டு இறுதிக்குள் நிறைவடையலாம்

15/01/2026 07:16 PM

கோலாலம்பூர், ஜனவரி 15 (பெர்னாமா) -- மலேசியா-சிங்கப்பூர் இணைப்பிற்கான ஆர்.தி.எஸ் எனப்படும் விரைவுப் போக்குவரத்து அமைப்பின் கட்டுமான பணிகள் சீராக நடைப்பெற்று வரும் நிலையில், திட்டமிட்டப்படி இவ்வாண்டு இறுதிக்குள் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

ஆர்.தி.எஸ்-இன் பெரும்பாலான உள்கட்டமைப்பு கட்டுமானப் பணிகள் நிறைவடைந்துள்ளதாகவும், அவை பொருத்தப்படும் கட்டத்தில் நுழைந்திருப்பதாகவும் போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் தெரிவித்தார்.

"நிலையத்தின் உள்ளே அதன் கட்டிடம் மற்றும் கட்டமைப்பைப் பொறுத்தவரை, அது நிறைவடைந்துள்ளது. ஆனால் தற்போது நாங்கள் ஒரு செயலியை நிறுவுகிறோம். செயலியை நிறுவியதும், அதற்கான சோதனை நடத்தப்படும். இது மிகவும் முக்கியமான கட்டம். ஏனெனில், அந்த சோதனை இல்லாமல், அது செயல்பட முடியாது. எனவே, அடுத்த சில மாதங்களில் பல சோதனைகள் மேற்கொள்ளப்படும். ஜோகூரில், இரயில் சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றது'' என்றார் அந்தோணி லோக்

இன்று, பெட்டாலிங் ஜெயாவில் REHDA நிறுவனம் ஏற்பாடு செய்த 2026-ஆம் ஆண்டு The CEO Series மாநாட்டில் முதன்மை உரையாற்றியப் பின்னர், அவர் செய்தியாளர்களிடம் அதனை கூறினார்.

ஜோகூர் பாரு-சிங்கப்பூர் ஆர்.தி.எஸ் இணைப்புத் திட்டத்திற்கான கூட்டு எல்லை கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை எளிதாக்குவதற்கான புதிய சட்ட மசோதாவை இயற்றுவது குறித்து நாடாளுமன்றத்தில் பரிந்துரைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாக, லோக் தெரிவித்தார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)