புத்ராஜெயா, ஜனவரி 08 (பெர்னாமா) -- தரைப்படையின் கொள்முதல் குத்தகை குறித்த ஊழல் வழக்கு தொடர்பாக மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம், எஸ்.பி.ஆர்.எம்-இன் விசாரணைக்கு உதவுவதற்காக தரைப்படை முன்னாள் தளபதி ஏழு நாள்களுக்கும் அவரின் இரண்டு மனைவிகளுக்கும் இன்று முதல் முறையே மூன்று மற்றும் ஆறு நாள்களும் தடுப்புக்காவல் விதிக்கப்பட்டுள்ளது.
புத்ராஜெயா மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் எஸ்.பி.ஆர்.எம்விண்ணப்பத்தை செவிமடுத்தப் பின்னர் மாஜிஸ்திரேட் எஸ்ரின் சக்காரியா, இந்த தடுப்புக் காவல் உத்தரவைப் பிறப்பித்தார்.
எஸ்.பி.ஆர்.எம் தனது விசாரணையை மேற்கொள்ள தங்கள் தரப்பு வழிவிடுவதாக அந்த முன்னாள் தரைப்படை தளபதியின் வழக்கறிஞர் நிசாமுடின் ஹமிட் தெரிவித்தார்.
எனினும், அந்த முன்னாள் தரைப்படை தளபதி தனது வழக்கறிஞருடன் தொடர்பு கொள்வதற்காக கூடுதல் உத்தரவை நீதிமன்றத்திடம் கோரியுள்ளதாக அவர் மேலும் கூறினார்.
முன்னதாக, அந்த முன்னாள் தரைப்படை தளபதியும் அவரின் இரண்டு மனைவிகளும் தடுப்புக்காவல் செயல்முறைக்காக மாஜிஸ்திரேட் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.
புத்ராஜெயாவில் உள்ள எஸ்.பி.ஆர்.எம் தலைமையகத்தில் வாக்குமூலம் அளிக்க வந்தபோது, அவரும் அவரின் இரண்டு மனைவிகளும் நேற்று மாலை 7 மணிக்கு கைது செய்யப்பட்டனர்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)