ஷா ஆலம், டிசம்பர் 05 (பெர்னாமா) -- சபாவில் கனிம ஆய்வு உரிமத்தை அங்கீகரிக்க மொத்தம் 64 ஆயிரத்து 924 ரிங்கிட் மதிப்பிலான கையூட்டைப் பெற்றதாகப் பிரதமரின் முன்னாள் மூத்த அரசியல் செயலாளர் டத்தோ ஶ்ரீ ஷம்சுல் இஸ்கண்டார் முஹமட் அகின் இன்று மீண்டும் ஷா ஆலம் செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டார்.
நீதிபதி டத்தோ முஹமட் நசீர் நோர்டின் முன்னிலையில் வாசிக்கப்பட்ட அக்குற்றச்சாட்டை 50 வயதான ஷம்சுல் இஸ்கண்டார் முஹமட் அகின் யுஸ்ரே மறுத்து விசாரணைக் கோரினார்.
2023ஆம் ஆண்டு நவம்பர் 28 முதல் 2024ஆம் ஆண்டு செப்டம்பர் 23ஆம் தேதி வரையில் காஜாங் கன்றி ஹைட்ஸில் உள்ள வங்கி ஒன்றில் 37 வயதான தொழிலதிபர் ஆல்பர்ட் தெய் ஜின் சேசிங் இடமிருந்து 64 ஆயிரத்து 924 ரிங்கிட்டைக் கையூட்டாகப் பெற்றதாகச் ஷம்சுல் இஸ்கண்டார் மீது குற்றம் சுமத்தப்பட்டது.
கோலாலம்பூரில் உள்ள வீடொன்றிற்கு வாடகை செலுத்துவதற்காக அப்பணம் பெண் ஒருவரின் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டது.
சபாவில் கனிம ஆய்வு உரிமங்களை அங்கீகரிப்பதில் தெய்க்குச் சொந்தமான நிறுவனங்களுக்கு உதவ இந்த கையூட்டு வழங்கப்பட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
2009ஆம் ஆண்டு மலேசிய ஊழல் தடுப்பு ஆணையச் சட்டம் செக்ஷன் 17(a) மற்றும் அதே சட்டம் செக்ஷன் 24(1) இன் கீழ் ஷம்சுல் இஸ்கண்டார் மீது குற்றம் சுமத்தப்பட்டது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சமாக 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் கையூட்டு தொகை அல்லது மதிப்பை விட குறைந்தது ஐந்து மடங்கு அல்லது 10,000 ரிங்கிட் அபராதம் அல்லது அவ்விரண்டில் அதிகமாக இருக்கும் தொகை அபராதமாக விதிக்கப்படும்.
நேற்று கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றம் நிர்ணயித்த அதே ஜாமீன் தொகை மற்றும் நிபந்தனைகளைத் தொடர்வதற்கான அரசு தரப்பு விண்ணப்பத்தை அனுமதித்து வழக்கை அதே நீதிமன்றத்திற்கு மாற்ற நீதிபதி முஹமட் நசீர் உத்தரவிட்டார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)