கோலாலம்பூர், அக்டோபர் 29 (பெர்னாமா) -- உணவு விரயத்தை தடுக்கவும் தூய்மையைப் பாதுகாக்கவும் கோலாலம்பூரில் வீடற்றவர்களுக்கு உணவு விநியோகித்து உதவிகள் வழங்க மூன்று அதிகாரப்பூர்வ இடங்களை அரசாங்கம் கோலாலம்பூர் மாநகராண்மைக் கழகம் டி.பி.கே.எல் மூலம் நிர்ணயித்துள்ளது.
சௌ கிட் சமூக கற்றல் மையம் மேடான் துவான்கு வீடற்ற சேவை மையம் மற்றும் கோலாலம்பூர் வீடற்றோர் போக்குவரத்து மையம் ஆகியவை அந்த மூன்று இடங்களாகும் என்று கூட்டரசு பிரதேசத்திற்கான பிரதமர் துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ டாக்டர் சலிஹா முஸ்தாபா தெரிவித்துள்ளார்.
"இந்த மூன்று இடங்களிலும் உணவு விநியோக நடவடிக்கைகள் டி.பி.கே.எல் மற்றும் தேசிய சமூகநல அறவாரியம் ஆகியவற்றில் பதிவு செய்யப்பட்ட அரசாங்கம் சார்பற்ற நிறுவனங்கள் மூலம் மேற்கொள்ளப்படுகின்றன. உதாரணத்திற்கு, கெசாரா சூப் கிச்சன், பெர்திவி சூப் கிச்சன் மற்றும் யெல்லோ ஹவுஸ். எனவே, இதுவரை டி.பி.கே.எல் உடன் எட்டு அரசாங்க சார்பற்ற நிறுவனங்களும், வாய்.கே.என் உடன் 14 அரசாங்க சார்பற்ற நிறுவனங்களும் இணைந்து செயல்படுகின்றன," என டத்தோ ஶ்ரீ டாக்டர் சலிஹா முஸ்தாபா கூறினார்.
இன்று, நாடாளுமன்ற கேள்வி பதில் நேரத்தின் போது, கோலாலம்பூரில் வீடற்றவர்கள் குறித்து புகிட் பிந்தாங் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எழுப்பிய கூடுதல் கேள்விக்கு டத்தோ ஶ்ரீ டாக்டர் சலிஹா முஸ்தாபா அவ்வாறு பதிலளித்தார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி (ஆஸ்ட்ரோ 502)